சாம்பிராணி, அதன் நறுமணப் புகை மற்றும் சிகிச்சை நன்மைகளுக்காக பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதிலும், பிரசவத்திற்குப் பிந்தைய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் இது பெரும் பங்கு வகிக்கிறது.
சாம்பிராணி புகை: அமைதி தரும் அருமருந்து
ஸ்டைராக்ஸ் மரத்தின் பிசினிலிருந்து பெறப்படும் பென்சாயின் சாம்பிராணி, ஆன்மீக சடங்குகள் மட்டுமின்றி அமைதிப்படுத்தும் சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் இனிமையான நறுமணம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைத்து, உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்துகிறது. பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் தாய்மார்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் உணர்ச்சி சவால்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
சாம்பிராணி நறுமணம் எப்படி அமைதியை ஏற்படுத்துகிறது?
சாம்பிராணி எரிக்கப்படும்போது வெளிப்படும் ஆவியாகும் நறுமணம், மூக்கின் வழியாக உள்ளிழுக்கப்பட்டு லிம்பிக் சிஸ்டத்துடன் தொடர்பு கொள்கிறது. இது உணர்ச்சி நினைவகங்கள் மற்றும் மனநிலை ஒழுங்குமுறையில் மூளையின் பகுதியாகும். பென்சாயின் போன்ற அமைதியான வாசனைகள் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவைக் குறைத்து, பதட்டத்தைப் போக்கும். பென்சாயின் ரெசினில் உள்ள பென்சாயிக் அமிலம், சினமிக் அமிலம், வானிலின், பென்சால்டிஹைட் போன்ற சேர்மங்கள் இலேசான மயக்க விளைவைக் கொண்டுள்ளன, அவை மனநிலையை மேம்படுத்தி பதட்டத்தைத் தணிக்கின்றன. அரோமோதெரபி ஆய்வுகள் இதன் நரம்பு பதற்றத்தைத் தணிக்கும் பண்புகளை உறுதிப்படுத்துகின்றன.
பிரசவித்த பெண்களுக்கு சாம்பிராணி புகையின் நன்மைகள்
- வெப்ப சிகிச்சை: பாரம்பரியமாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் சாம்பிராணி புகைக்கு அருகில் அமர்வார்கள். இது பெரினியல் பகுதிக்கு மென்மையான வெப்பத்தை அளித்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் விரைவாகச் சென்று, தசைப்பிடிப்பு, வலி மற்றும் வீக்கம் குறைகிறது.
- மனநல ஆதரவு: சாம்பிராணி நறுமணம் லிம்பிக் அமைப்புடன் தொடர்பு கொண்டு, ஹார்மோன் சமநிலையை நிர்வகித்து, பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது.
- சுற்றுச்சூழல் மேம்பாடு: புகையின் நறுமணம் கடுமையான நாற்றங்களை மறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது, இது அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது.
- காயங்கள் குணப்படுத்துதல்: பிசினில் உள்ள கிருமி நாசினி பண்புகள், காயங்கள் விரைவில் குணமடைய உதவுகின்றன. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தடுத்து, தொற்று வராமல் பாதுகாக்கிறது. பெரினியல், எபிசியோடமி, சிசேரியன் கீறல்கள் போன்ற பிரசவ காயங்களை குணப்படுத்துவதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு சாம்பிராணி புகை: கவனிக்க வேண்டியவை
பிறந்த குழந்தைக்கு குளிப்பாட்டிய பிறகு, பாதுகாப்பான தூரத்தில் வைத்து சாம்பிராணி புகையைப் பரப்பலாம். இது இயற்கை பூச்சி விரட்டியாகச் செயல்படும். எனினும், குழந்தையின் அருகில் புகை வரும்படி செய்யக் கூடாது. பென்சாயினில் உள்ள சில நறுமணச் சேர்மங்கள் மன அழுத்த நிவாரணம், தோல் மீளுருவாக்கம், நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாம்பிராணி பக்கவிளைவுகள்
இயற்கையான இந்த பிசின்களிலிருந்து வரும் புகையை உள்ளிழுப்பது ஆஸ்துமா அல்லது சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தலாம். சாம்பிராணி புகையை எரிக்கும்போது சரியான காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நீண்ட நேரம் புகையை உள்ளிழுப்பது சுவாச மண்டலத்தை எரிச்சலடையச் செய்யலாம்.