ராமலிங்க அடிகளார் என்றும், வள்ளலார் என்றும் ஆன்மீக அன்பர்களால் போற்றப்படும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவி, "இறைவன் ஒருவனே, அவன் ஜோதி வடிவமானவன், அவன் அனைத்து உயிர்களிலும் இருக்கிறான்" என்பதை வலியுறுத்தினார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வள்ளலார், சத்திய தருமச்சாலையை ஏற்படுத்தி அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கினார். வடலூரில் ஜோதியாக முக்தி அடைந்த மகான், மனித குலத்தின் நல்வாழ்விற்காக பல போதனைகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறிய, நாம் தவிர்க்க வேண்டிய 42 வகையான பாவங்கள் எவை என்பதை ஜோதிடம்360 வழியே அறிவோம்.
வள்ளலார் கூறும் 42 வகையான பாவங்கள்:
நாம் அறியாமலோ அல்லது தெரிந்தே செய்யும் சில செயல்கள் கர்மாவாக மாறி, வருங்காலத்தில் நமக்கு துன்பத்தை ஏற்படுத்தும். அத்தகைய துன்பங்கள் ஏற்படாமல் இருக்க, வள்ளலார் போதித்த இந்த 42 வகையான பாவங்களை செய்வதை தவிர்க்க வேண்டும்.
- 1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
- 2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
- 3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
- 4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
- 5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
- 6. குடிமக்களிடம் வரியை உயர்த்திக் கொள்ளையடிப்பது.
- 7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
- 8. தருமம் பாராது தண்டிப்பது.
- 9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
- 10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
- 11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
- 12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
- 13. ஆசை காட்டி மோசம் செய்வது.
- 14. போக்குவரத்திற்குரிய வழியை அடைப்பது.
- 15. வேலை வாங்கிக் கொண்டு சம்பளத்தை குறைப்பது.
- 16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
- 17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
- 18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
- 19. நட்டாற்றில் கை நழுவுவது.
- 20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
- 21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
- 22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
- 23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
- 24. கருவைக் கலைப்பது.
- 25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
- 26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
- 27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
- 28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
- 29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
- 30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
- 31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
- 32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
- 33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
- 34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
- 35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
- 36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
- 37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
- 38. சிவனடியாரைச் சீறி வைவது.
- 39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
- 40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
- 41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
- 42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கூறுவது.
மேற்கண்ட இத்தகைய பாவங்களுக்கு உரிய வினைகள் கர்மாவாக மாறி, நமக்கு வருங்காலத்தில் துன்பத்தை ஏற்படுத்தும். அத்தகைய துன்பங்கள் நமக்கு ஏற்படாமல் இருக்க, வள்ளலார் அருளிய இந்த 42 வகையான பாவங்களை செய்வதை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும். இது நமது ஆன்மீக வளர்ச்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் அத்தியாவசியமானது.