தமிழ்நாடு அரசு வேளாண் உற்பத்தியை அதிகரித்திடவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கிடவும் எண்ணற்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு அவர்களின் கிராமங்களிலேயே வழங்கிடும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த மற்றொரு உன்னத திட்டம் தான் உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம். இந்த திட்டம் விவசாயிகளின் வாழ்வு செழிக்கவும், தமிழகத்தின் பாரம்பரிய வேளாண்மை சிறப்புறவும் வழி வகுக்கிறது. தற்போது, இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? யாரெல்லாம் பயனடைவார்கள்? திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது? போன்ற பல தகவல்களை விரிவாக இப்பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம்: ஒரு பார்வை
வேளாண்மை உற்பத்தி மற்றும் உழவர்களின் வருமானம் ஆகியவற்றை அதிகரிக்க, விவசாய ஆலோசனைகளுடன், தொழில்நுட்பங்கள் மற்றும் துறைச் சார்ந்த திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளிடம் எடுத்துச் செல்வது மிகவும் அவசியம். ஏனென்றால், விவசாயிகள் பயிர்சாகுபடியுன் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர். இவை அனைத்திற்கும் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கவும், அந்தந்த துறை சார்ந்த திட்டங்களின் பலனை பெறவும் தமிழ்நாடு அரசு உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டம் என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது.
இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29.05.2025 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் அவர்களின் கிராமங்களிலேயே வேளாண்மை குறித்த ஆலோசனைகளை பெறலாம். தமிழகத்தில் உள்ள மொத்தம் 17,116 வருவாய் கிராமங்களிலும் ஓராண்டுக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உழவரைத் தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டத்தின் நன்மைகள்
வழக்கமாக நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் விவசாயிகள் துறை சார்ந்த அலுவலர்களை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள். ஆனால், இந்த உழவரைத் தேடி உழவர் நலத்துறை திட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று, அவர்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிவார்கள். இதன் மூலம், காலவிரயம் தவிர்க்கப்பட்டு, உடனடி தீர்வுகள் கிடைக்கும்.
- அதிகாரிகள் விவசாயிகளுக்கு வயல்வெளி பாதுகாப்பு, பரப்பு, மகசூல், சாகுபடி குறித்து உரிய விளக்கம் அளிப்பார்கள்.
- பயிர்களுக்கு தேவையான இடு பொருட்கள், உரம் குறித்தும், பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்தும் உரிய ஆலோசனைகளை வழங்குவார்கள்.
- வேளாண்மை துறை மற்றும் சகோதரத் துறைகளை சார்ந்த அரசுத் திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள், விளைப்பொருட்களை மதிப்புக் கூட்டுவது, அதை சந்தைப்படுத்துவது போன்ற தகவல்கள் வழங்கப்படும்.
- கூட்டுறவு சங்கங்களின் பயிர் கடன்கள் பெற தேவையான உதவிகள், கால்நடைகள் மற்றும் மீன் வளர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்ற பல சேவைகளை பெறலாம்.
இத்திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு சிறந்த வாய்ப்பாக அமைவதோடு, வேளாண்மை துறையில் உள்ள அனைத்து திட்டங்களை பற்றியும் தெரிந்துக் கொள்வார்கள்.
உழவரைத் தேடி உழவர் நலத்துறை சிறப்பு முகாம்
உழவரைத் தேடி உழவர் நலத்துறை திட்ட சிறப்பு முகாம்கள், ஒவ்வொரு மாதமும் 2 வது மற்றும் 4 வது வெள்ளிக்கிழமைகளில் (15 நாட்களுக்கு ஒருமுறை) ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடைபெறும். இந்த முகாமில் வேளாண்மை துறையுடன் தொடர்புடைய 9 துறை அலுவலர்கள் கலந்துக் கொள்வார்கள்.
அதன்படி, வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், விதைச்சான்றளிப்புத் துறை வட்டார அலுவலர்கள் மற்றும் சகோதரத் துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவார்கள்.
விவசாயிகளுக்கு வேளாண்மையில் ஏதேனும் சந்தேகங்கள், கோரிக்கைகள் இருந்தால், இம்முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம். அதுமட்டுமின்றி பயிர் கடன், மானியத்திற்கு விண்ணப்பிப்பதாக இருந்தாலும் இந்த முகாமிலேயே செய்யலாம்.
விவசாயிகளின் செழிப்பு – தமிழ் பாரம்பரியத்தின் ஒரு அங்கம்
இத்தகைய வேளாண்மை நலத் திட்டங்கள் மூலம், தமிழ் மண்ணும் விவசாயிகளும் செழிப்படைந்து, முருகனின் அருளாலும், தமிழ் மொழியின் தொன்மையினாலும் நல்ல விளைச்சலை அடைவர். ஜாதகம் மற்றும் ஜோதிடத்தின் படி சுபமான காலங்களில் இத்திட்டங்களைப் பயன்படுத்தி, தமிழகத்தின் ஆறுபடை வீடுகள் போல, விவசாயத்தின் ஆறு அங்கங்களும் சிறந்து விளங்கட்டும். இதன் மூலம், ஒவ்வொரு விவசாயியும் தங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலனைப் பெற்று, வாழ்வில் வளம் பெறுவார்கள்.