கலியுக வரதனான முருகப்பெருமான் பக்தர்கள் குறைகளைத் தீர்த்து வரம் அருள்பவர். உலகில் பல முருகன் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சிறப்பு வாய்ந்தது இலங்கையில் உள்ள புகழ்பெற்ற கதிர்காம முருகன் கோவில். ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இக்கோவில் முருக பக்தர்களுக்கு ஒரு புண்ணிய ஸ்தலமாகும். கதிர்காம முருகன், ஆறுபடை வீடுகள் போன்று ஒரு முக்கியமான வழிபாட்டு மையமாக திகழ்கிறது.
கதிர்காம முருகன் கோவில்: வரலாறு மற்றும் தனிச்சிறப்புகள்
இலங்கையின் தென்கிழக்கு கரையில் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள கதிர்காமத்தில், "காப்புறாளைமார்" எனப்படும் சிங்கள பூசாரிகள் வாயைக் கட்டிக்கொண்டு திரைக்குப் பின்புறம் பூஜை செய்கிறார்கள். இங்கு கருவறையில் முருகப்பெருமானின் சிலை இல்லை; ஒரு புனிதப் பெட்டிக்குத்தான் பூஜை நடைபெறுகிறது. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்த முருகன், இங்கு வள்ளியை காதல் திருமணம் செய்ததால் இத்திருத்தலம் கதிர்காமம் எனப் பெயர் பெற்றது.
பக்தர்கள் இங்குள்ள முருகப்பெருமானை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்த கடவுள் எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் கதிர்காமத்திற்கு வந்ததாகவும், இங்கு மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்து, போரில் வெற்றி பெற்ற பின் நவகங்கை தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக எழுந்தருளியதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. இது தமிழ் மக்களின் ஆன்மீக வாழ்விலும் முக்கிய பங்காற்றுகிறது.
அருணகிரிநாதரும் இக்கோயிலைப் பற்றி "வனமுறை வேடன் அருளிய பூசை மயில் கதிர் காமம் உறைவோனே" எனப் பாடியுள்ளார். இங்கு பூஜை செய்யும் "காப்புறாளைமார்" தங்களை வள்ளி அம்மையின் வழித்தோன்றல்கள் எனக் கருதுகின்றனர். கருவறையில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானின் ஓவியம் வரைந்த வண்ணத்திரை உள்ளது. பக்தர்கள் சமர்ப்பிக்கும் அர்ச்சனைப் பொருட்களை திரைக்குள் சென்று "காப்புறாளைமார்" சுவாமிக்கு சமர்ப்பித்து பூஜை செய்கிறார்கள். காஷ்மீரை சேர்ந்த துறவி கல்யாணி கிரி 12 ஆண்டுகள் இங்கு தவமிருந்தார், அவரது சமாதியும் இங்கே உள்ளது. முத்துலிங்க சுவாமிகள் வழிபட்ட சரவணபவ எந்திரமே கருவறையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கதிர்காமத்தில் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக் கடன்கள்
- காவடி எடுத்தல்
- கற்பூர சட்டி எடுத்தல்
- அங்கப் பிரதட்சணம் செய்தல்
- தேங்காய் உடைத்தல்
- தீ மிதித்தல்