கண்ணன் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி திருநாளில், விரதம் இருந்து அவரை வழிபடுவது எப்படி? கிருஷ்ணரின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்? இந்த வழிகாட்டியில் விரிவாகப் பார்ப்போம்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களும் அதன் முக்கியத்துவமும்
மகாவிஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுவதே கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆகும். கோகுலாஷ்டமி, ரோகிணி அஷ்டமி உள்ளிட்ட பல பெயர்களால் இந்த பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள கிருஷ்ணர் பக்தர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இது மக்களுக்கு கலாச்சாரம், ஒற்றுமை, தெய்வீக குணங்கள் ஆகியவற்றை கற்றுத் தருகிறது. இந்த நாளில் கண்ணனின் அருளைப் பெறுவதற்காக பலர் விரதம் இருந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். கிருஷ்ண ஜெயந்தி அன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
கிருஷ்ண ஜெயந்தி விரத முறைகள்
- விரதம் இருப்பவர்கள் முதல் நாள் இரவோ அல்லது கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவோ விரதத்தை துவக்கி விட வேண்டும்.
- கிருஷ்ண ஜெயந்தி அன்று தானியங்கள், பயறு வகைகள், வெங்காயம், பூண்டு ஆகிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
- பழங்கள், தயிர், பால் மற்றும் எளிமையான சைவ உணவுகளைச் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும்.
- நாள் முழுவதும் கிருஷ்ணரைப் போற்றிப் புகழும் பஜனைப் பாடல்கள் பாடுதல், மந்திரங்களை உச்சரித்தல், கிருஷ்ணரின் கதைகளைப் படித்தல் போன்ற பக்தி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
- கிருஷ்ணரின் படங்களை அலங்கரித்து, பூஜை செய்து, கிருஷ்ணருக்குப் பிடித்தமான இனிப்பு உள்ளிட்ட பொருட்களை நைவேத்தியமாகப் படைத்து வழிபட வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தி விரதத்தின் மகத்தான பலன்கள்
கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதால் ஏராளமான ஆன்மிக மற்றும் உடல் ரீதியான நன்மைகள் கிடைக்கிறது. இந்த வழிபாடு உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.
- மனதில் உள்ள கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
- வாழ்வில் இருக்கும் தீமைகள் நீங்கி, நன்மைகள் பெருகும்.
- நம்பிக்கை மற்றும் மன உறுதி அதிகரிக்கும்.
- பக்தி உணர்வு அதிகரிப்பதால் கர்மவினைகள் நீங்கும், ஞானம் பெருகும்.
- ஒற்றுமை உணர்வு, பகிர்தல் ஆகிய நல்ல சிந்தனைகள் மேலோங்கும்.
- குழந்தை இல்லாதவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்திக்குள், அந்த கண்ணனே உங்கள் வீட்டில் குழந்தையாக வந்து பிறப்பான் என்பது ஐதீகம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று என்னென்ன நைவேத்தியங்கள் படைக்கலாம்?
கிருஷ்ணருக்கு விருப்பமான இனிப்பு வகைகள், பாலால் செய்த உணவுகளைப் படைத்து வழிபடலாம். அதே போல் நெய்யால் செய்த பலகாரங்களையும், வெண்ணெய்யும் படைத்து வழிபடலாம். பல விதமான பழங்கள் ஆகியவற்றையும் கண்ணனுக்குப் படைத்து வழிபடலாம்.
வட மாநிலங்களில் சில பகுதிகளில் கிருஷ்ணருக்கு 64 வகையான இனிப்பு வகைகள் செய்து படைத்து, வழிபடும் வழக்கம் உள்ளது. இது போல் எதுவும் செய்ய முடியாதவர்கள் எளிமையாக அவல், பால் படைத்து வழிபடலாம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள்
கிருஷ்ண ஜெயந்தி அன்று குறிப்பிட்ட இந்த மந்திரத்தைத்தான் சொல்ல வேண்டும் என்பது கிடையாது. கிருஷ்ணருக்குரிய எந்த மந்திரத்தை வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம்.
- ஹரே கிருஷ்ண மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை உச்சரிக்கலாம்.
- மகாவிஷ்ணுவை ஆயிரம் திருநாமங்களைச் சொல்லிப் போற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வழிபடலாம்.
- கிருஷ்ணரின் அஷ்டோத்திர சதநாமாவளி துதிகளைச் சொல்லி, பூ போட்டு கிருஷ்ணரை மனம் மகிழும் படி துதிக்கலாம்.
கிருஷ்ண ஜெயந்தி 2025: தேதி குழப்பங்கள் நீங்க!
கிருஷ்ண ஜெயந்தி வழக்கமாக ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் 2025 ஆம் ஆண்டு ஆடி மாதத்திலேயே வருகிறது. ஆடி மாதத்தின் நிறைவு நாளான ஆகஸ்ட் 16ம் தேதியான சனிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணர் அவதரித்தது ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் தான்.
ஆனால் ஆகஸ்ட் 16ம் தேதி தேய்பிறை அஷ்டமி திதி மட்டுமே உள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி தான் ரோகிணி நட்சத்திரம் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதி கார்த்திகை நட்சத்திரம் தான் அமைந்துள்ளது. இதனால் திதியை அடிப்படையாகக் கொண்டாடுபவர்கள் ஆகஸ்ட் 16ம் தேதியும், நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுபவர்கள் ஆகஸ்ட் 17ம் தேதியும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடலாம். காரணம் கிருஷ்ணர் அவதரித்த நாளை சில சமூகத்தினரும், கோகுலத்திற்கு வந்த மறுநாளை கோகுலாஷ்டமியாக சிலரும் கொண்டாடும் வழக்கம் இருந்து வருகிறது.