சூரிய உதயத்திற்கு முன் அதிகாலையில் தோன்றும் பிரம்ம முகூர்த்தம், ஒரு நாளின் மிகவும் புனிதமான மற்றும் சக்திவாய்ந்த நேரமாக இந்து மதத்தில் கருதப்படுகிறது. அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள இந்த காலம், பிரம்மா என்ற படைப்புக் கடவுளின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் எழுவது உங்கள் வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வரும் என்பது நம்பிக்கை.
பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன?
சூரியன் உதிப்பதற்கு முன் அதிகாலையில் வெயில் தோன்றுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன்பு, அதாவது அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. பொதுவாக ஒரு நாளின் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வம் அல்லது தேவர்களுக்கு உரிய நேரமாக குறிப்பிடப்படுவது கிடையாது. ராகு காலம், எமகண்டம் என்பது நவகிரகங்களான ராகு, கேதுவிற்குரிய நேரமாகும். ஆனால் இந்த குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஏன் பிரம்மாவின் பெயரால் குறிப்பிடுகிறோம்? இந்த நேரத்தில் எழுவது வாழ்க்கையே மாற்றும் திறன் கொண்டது என ஏன் சொல்லப்படுகிறது என்பதை இங்கு விரிவாக காணலாம்.
ஏன் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது?
இந்து மத நம்பிக்கைகளின் படி, பிரம்மாவே உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் படைக்கும் கடவுளாக கருதப்படுகிறார். படைத்தல் தொழிலை செய்பவர் பிரம்மா என சொல்லப்படுகிறது. இவர் நான்கு வேதங்களை தன்னுடைய நான்கு முகங்களாக வைத்து, அந்த வேதங்களின் அடிப்படையில் உயிர்களை சிருஷ்டிக்கும் தொழிலை செய்வதாக சொல்லப்படுகிறது. பிரம்மன் என்றால் நான்முகனைக் குறிக்கின்றது. இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் காலையில் கண் விழிப்பது என்பது (மரணத்திற்கு ஒத்திகை போன்றது) ஏறக்குறைய மறுபிறவிதான். இரவில் தூங்கச் செல்லும் அனைத்து உயிர்களும் அடுத்த நாள் சூரிய உதயத்தை காண்பது கிடையாது. அது மட்டுமின்றி தூக்கம் என்பது உடலில் இருந்து ஆன்மா வெளியில் சென்று பயணித்து விட்டு வருவது தான். அப்படி பார்க்கும் போது இதுவும் ஒரு மரணத்திற்கு சமமானது தான். எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் சிவபெருமானின் பெருங்கருணையால் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.
பிரம்ம முகூர்த்தத்தின் பலன்கள் மற்றும் முக்கியத்துவம்
பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளைதான். அதனால்தான், பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்வது, புதுமனை புகுவது போன்ற நல்ல செயல்கள் நடைபெற ஏற்ற நேரமாக இருக்கிறது. இந்நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாட்டைச் செய்து, நமது வேலைகளைச் செய்யத் துவங்கினால், அன்று முழுவதும் உடலும், உள்ளமும் உற்சாகத்துடன் இருக்கும். பிரம்ம முகூர்த்த வேளையில் எழுவதும், படிப்பதும் நல்ல பலனைத் தரும். பெண்கள், அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவதன் மூலம் பிரம்ம முகூர்த்த வேளையின் பலன்களைப் பெறுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் அனைத்து வளங்களையும் பெறமுடியும் என்பது நம்பிக்கை. இதே போல், உபாசனைக்குக் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒரு கடமையாகும். இந்த நேரம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது. மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் மந்திர ஜெபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்ம முகூர்த்தத்தில் ஒருவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. இந்து சமயப் புராணங்களில் வரும் ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, தியானங்களை மேற்கொள்வதும் இதனடிப்படையில் தான் என்கின்றனர்.
பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டியவை மற்றும் அதன் நன்மைகள்
- வழிபாடு: இறைவழிபாடு மற்றும் தியானம் செய்ய மிக உகந்த நேரம்.
- படிப்பு: மனதை ஒருமுகப்படுத்தி கல்வி கற்க சிறந்த நேரம்.
- சுப காரியங்கள்: திருமணம், புதுமனை புகுதல் போன்ற நல்ல செயல்களுக்கு தோஷமற்ற சுபவேளை.
- உடல் ஆரோக்கியம்: உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.
- மந்திர ஜெபம்: மந்திரங்களின் சக்தி அதிகரித்து, நற்பலன்களைக் கூட்டும்.