ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி திதி விஷ்ணு பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் வைகாசி மாத கிருஷ்ண பக்ஷத்தில் வரும் அபரா ஏகாதசி விரதம், பாவங்களை போக்கி புண்ணியத்தை சேர்க்கும் ஒரு சக்திவாய்ந்த விரதமாகும். இந்த சிறப்பு வாய்ந்த அபரா ஏகாதசி விரதத்தின் பலன்கள், அதை அனுசரிக்கும் முறை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
அபரா ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவம்
அபரா ஏகாதசி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கொலை செய்த பாவம், புனித நூல்களை அவமதித்தது, பிறரைத் தூற்றுவது, பொய் சாட்சி சொல்வது, பொய் பேசுவது, தவறான சாஸ்திரங்களை உருவாக்குவது அல்லது ஊக்குவிப்பது, மருத்துவர் அல்லது ஜோதிடர் போல் நடிப்பது போன்ற பாவங்கள் கூட நீங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதம் மிகவும் புண்ணியமானதாகவும், ஆன்மீக ரீதியில் உயர்வானதாகவும் கருதப்படுகிறது.
ஜேஷ்ட மாதம் எனப்படும் வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசியான அபரா ஏகாதசி விரதம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதாவது மே 23ஆம் தேதி. இந்த நாளில் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பத்ம புராணத்தின்படி, இந்த நாளில் விஷ்ணு பகவானின் வாமன அவதாரம் வணங்கப்படுகிறது. அபரா ஏகாதசிக்கு அக்ஷயா ஏகாதசி, பத்ரகாளி ஏகாதசி, ஜல்க்ரீடா ஏகாதசி போன்ற வேறு பெயர்களும் உண்டு. இந்த விரதத்தை மேற்கொள்வதால் துக்கங்கள் நீங்கும், பாவங்கள் கழுவப்படும் என்பது ஐதீகம். ஜோதிட ரீதியாகவும் இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்தது.
அபரா ஏகாதசி பலன்கள்
அபரா ஏகாதசியின் ஆன்மீக பலன்கள் மற்ற புனித செயல்களுக்கு இணையானது. உதாரணமாக, கீழ்க்கண்ட புண்ணிய செயல்களுக்கு இணையான பலன்களை இந்த விரதம் தரும்:
- மகர சங்கராந்தி அன்று பிரயாகையில் புனித நீராடுவது
- காசியில் சிவராத்திரி விரதம் இருப்பது
- கயாவில் முன்னோர்களுக்குச் சடங்குகள் செய்வது
- குரு சிம்ம ராசியில் இருக்கும்போது கோதாவரியில் நீராடுவது
- பத்ரிகாஷ்ரமத்தில் கேதார்நாத் கோயிலுக்குச் செல்வது
- சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் தானம் மற்றும் சடங்குகள் செய்வது
உண்மையில், இந்த விரதத்தை அனுசரித்து, அதன் முக்கியத்துவத்தை படித்தாலோ அல்லது கேட்டாலோ ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. விஷ்ணு பகவானின் அருளைப் பெற இந்த விரதம் ஒரு சிறந்த வழி.
பெருமாளை வணங்கும் முறை
அபரா ஏகாதசி அன்று விஷ்ணு பகவானை, குறிப்பாக வாமன வடிவத்தை வணங்க வேண்டும்.
- துளசி இலைகள் மற்றும் பூக்களை ஹரியின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
- "ஓம் நமோ பகவதே வாசுதேவாய" என்ற மந்திரத்தை உச்சரித்து, விஷ்ணு சஹஸ்ரநாமம் (விஷ்ணுவின் ஆயிரம் பெயர்கள்) பாராயணம் செய்வது மிகவும் நல்லது.
- கோபம், பொய், பேராசை, வெறுப்பு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
- பக்தி பாடல்கள் பாடி இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- மறுநாள் துவாதசியன்று, முதலில் பிராமணர்களுக்கு உணவு அளித்தபின் விரதத்தை முடிக்க வேண்டும்.
இந்த நாளில் உபவாசமாக விரதம் இருக்க முடியாவிட்டாலும் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசித்து வழிபடுவது, பெருமாளுக்கு துளசி இலைகளை படைத்து அர்ச்சனை செய்வது, அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு தானம் செய்வது ஆகியவை அபரா ஏகாதசி விரதம் இருந்ததற்கு இணையான பலன்களை தரும். பெருமாள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என சொல்லப்படுவதால், இந்த நாளில் பெருமாளை மனதார நினைத்து எந்த ஒரு ஜீவராசிக்கு உணவளித்தாலும் பல உயிர்களுக்கு அன்னதானம் அளித்த பலன் கிடைக்கும். இது ஜோதிட ரீதியாகவும் நல்ல பலன்களை அளிக்கும்.