எறும்பு கடித்தால் திருநீறு பூசும் பழக்கம் காலங்காலமாக தமிழர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தமிழகத்தின் கலாச்சார மற்றும் ஆன்மீக மரபுகளில் திருநீறு முக்கிய இடம் பெறுகிறது. முருகன் ஆலயங்கள் மற்றும் பிற தமிழ் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் திருநீறு, பலருக்கும் ஒரு நம்பிக்கைக்குரிய பொருளாகும். இது ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியமாக இருந்தாலும், இதன் அறிவியல் பூர்வமான சாத்தியக்கூறுகள் குறித்து சரும நிபுணர் டாக்டர் ஸ்வேதா ராகுல் அவர்கள் விளக்குகிறார்.
சரும நிபுணர் ஸ்வேதா ராகுல் அவர்களின் விளக்கம்:
பொதுவாக, எறும்பு அல்லது குழவி கடித்த இடத்தில் சேறு, மண், அல்லது சாம்பல் போன்றவற்றை பூசுவது ஒரு பொதுவான பழக்கம். எறும்பு கடித்தவுடன் அந்த இடம் சிவந்து, லேசாக வீங்கியது போல தோன்றும். இந்த நிலையில் வீட்டில் இருக்கும் திருநீறு அல்லது சாம்பலை நீரில் குழைத்து பூசுவது என்பது நீண்டகாலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
டாக்டர் ஸ்வேதா ராகுல் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் வீடியோவில் குறிப்பிடுவதாவது, எறும்பு கடிக்கும்போது சருமத்தில் ஹிஸ்டமைன் உள்ளிட்ட இன்ஃபிளமேட்டரி மீடியேட்டர்கள் உருவாகின்றன. இதனால் தான் கடித்தவுடன் தடிப்பு, நமைச்சல், வலி மற்றும் சுறுசுறுவென்று பிடிப்பது போன்ற உணர்வுகள் ஏற்படுகின்றன.
அந்த சமயத்தில் திருநீறை தண்ணீரில் குழைத்து போடுவது எறும்பு கடித்தவுடன் ஏற்படும் எரிச்சலைத் தணிக்கவும், சற்று குளிர்ச்சியாக உணரவும் உதவும். இது இன்ஃபிளமேட்டரி மீடியேட்டர்களால் உருவாகும் சூட்டைத் தடுத்து, சரும எரிச்சலைக் குறைக்கும். நன்கு குளிர்ச்சியாக உணர வைக்கும்.
ஆனால், திருநீறு அந்த இன்ஃபிளமேஷனையோ அதன் நீண்டகால பாதிப்பையோ சரிசெய்யாது. அது தற்காலிகமாக எரிச்சல் மற்றும் வலியைக் குறைக்க மட்டுமே உதவி செய்யும். குளிர்ச்சிக்காக எறும்பு கடித்த இடத்தில் திருநீறு பூசுவதில் தவறும், ஆபத்தும் எதுவும் இல்லை என்கிறார் டாக்டர் ஸ்வேதா ராகுல்.
இறுதியாக, காலங்காலமாக பின்பற்றப்படும் எல்லா வீட்டு வைத்தியங்களுமே அறிவியல் ரீதியான ஆதாரங்களை முழுமையாக கொண்டிருப்பதில்லை. அதேநேரம், எல்லாமே பயனற்றவையும் அல்ல. இதுபோன்ற சின்ன சின்ன, ஆபத்தில்லாத வீட்டு வைத்தியங்களை செய்வதில் தவறில்லை. ஆனால், அனைத்தையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றக் கூடாது என்பதே அவருடைய அறிவுரை.
முக்கிய அம்சங்கள்
- எறும்பு கடி விளைவுகள்: கடிக்கும்போது ஹிஸ்டமைன் உற்பத்தி, தடிப்பு, நமைச்சல், வலி.
- திருநீற்றின் பயன்: தண்ணீரில் குழைத்து பூசும்போது தற்காலிக குளிர்ச்சி மற்றும் எரிச்சல் குறைதல்.
- சிகிச்சை அல்ல: திருநீறு வீக்கம் அல்லது இன்ஃபிளமேஷனை குணப்படுத்தாது.
- பாதுகாப்பு: குளிர்ச்சிக்காக பூசுவதில் ஆபத்து இல்லை.
- வீட்டு வைத்தியம்: சில அறிவியல் ஆதாரம் இல்லாதவை, ஆனால் ஆபத்தில்லாதவற்றை பயன்படுத்தலாம்.