தமிழர்களின் ஆன்மீக வாழ்வில் சிவபெருமானின் நடராஜர் திருமேனிக்குரிய சிறப்பு நாட்கள் பல உண்டு. அவற்றில் மிக முக்கியமான ஒன்று ஆனி உத்திர திருமஞ்சனம். ஒவ்வொரு ஆனி மாதத்திலும் உத்திர நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் இந்த புனித தினத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பலன்களையும், ஏன் இவ்வளவு சிறப்பு என்பதையும் jothidam360.in இல் விரிவாக காண்போம்.
ஆனி உத்திர திருமஞ்சனம் என்றால் என்ன?
சிவபெருமானின் நடராஜர் திருமேனிக்கு செய்யப்படும் மிக முக்கியமான அபிஷேக நாள் ஆனி உத்திர திருமஞ்சனம். ஆனி மாதத்தில் (ஜூன்-ஜூலை) உத்திர நட்சத்திர நாளில் இது கொண்டாடப்படுகிறது. சிவனின் நடனம் உலக இயக்கத்தை உணர்த்துகிறது. அபிஷேக பிரியரான சிவ பெருமானுக்கு அவரது மனதை குளிர செய்வதற்காக பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடத்தப்படும். இந்த நாளில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன.
சிவபெருமான் ஆனந்த தாண்டவம்
மாயை மற்றும் அஹங்காரத்தை அழிக்க நினைத்த சிவ பெருமான், தாருகாவனத்தில் முனிவர்களின் ஆவணத்தை அடக்குவதற்காகவும் ஆடிய நடனமே ஆனந்த தாண்டவம். ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த சிவன் நினைத்தார். தன்னை உணரவும், ஆத்ம ஞானம் அடையவும் சிவன் தாண்டவம் மூலம் மனதை தூய்மைப்படுத்துகிறார். ஆனந்த தாண்டவம் என்பது மோட்சத்தின் பாதையை காட்டும் அடையாளம் ஆகும்.
சிவனின் கைகளில் உள்ள பொருட்கள் மற்றும் நடனத்தின் நிலை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. வலது கையில் அராவம் (அழிவு), இடது கையில் அக்னி (அழித்தல்), ஒரு கால் மேலே (கிருபை), மற்றொரு கால் கீழே (அஹங்காரத்தை அழித்தல்) உள்ளன. நடராஜரை சுற்றி உள்ள நெருப்பு வளையமானது உலகியல் இன்பங்கள், பிறப்பு-இறப்பு என்ற வாழ்க்கை சுழற்சியை காட்டுகிறது.
சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியது, எல்லா உயிர்களுக்கும் ஞானம், விடுதலை, கருணை ஆகியவற்றை வழங்கும் செயலாகும். இது உலகம் இயங்கும் விதியையும் காட்டுகிறது.
ஆனி உத்திர அபிஷேகம் ஏன் சிறப்பு?
"திருமஞ்சனம்" என்றால் "புனித நீராடல்" என்று பொருள். ஆனி உத்திர நாளில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனைகள் நடத்தப்படுகின்றன. இவ்விழா பஞ்ச சபைகள் என போற்றப்படும் சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஐந்து தலங்களிலும் மிக சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.
நடராஜரின் வடிவம் சிவபெருமானின் ஐந்து தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருள் புரிதல் ஆகியவற்றை குறிப்பதாகும். இந்த அபிஷேகம் இந்த ஐந்து தொழில்களையும் போற்றும் விதமாக நடைபெறுகிறது.
ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில் தோன்றி உபதேசம் வழங்கினார் என்று நம்பப்படுகிறது. மாணிக்கவாசகர் "திருவாசகம்" என்ற புகழ்பெற்ற பக்தி நூலை எழுதியவர். இதனால் இந்த நாள் சிவபக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆனி திருமஞ்சனத்தை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள்
- செல்வ வளம்: வாழ்வில் செல்வம் பெருகும்.
- மகிழ்ச்சி: மன அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டும்.
- துன்பங்களில் இருந்து விடுதலை: கஷ்டங்கள் நீங்கும்.
- சிவபெருமானின் அருள்: சிவனின் நேரடி ஆசி கிடைக்கும்.
- திருமண பிரச்சனைகளுக்கு தீர்வு: சுப காரியங்கள் கைகூடும்.
- பண நெருக்கடி மற்றும் நோய்களுக்கு தீர்வு: பொருளாதார, உடல்நலப் பிரச்சனைகள் நீங்கும்.
ஆனி திருமஞ்சன நாளில் என்ன செய்ய வேண்டும்?
ஆனி திருமஞ்சனம் நடைபெறும் சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண சிவன் சன்னதியில் எழுந்தருளுவதாக ஐதீகம். அந்த சமயத்தில் நாமும் சிவன் சன்னதியில், சிவ தரிசனம் கண்டு, நம்முடைய மனக்குறைகளை சொல்லி முறையிட்டால், சிவனின் அருளும், தேவர்களின் அருளும் ஒரே நேரத்தில் கிடைப்பதால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும். சிவ பெருமான் மனம் குளிர்ந்திருக்கும் நேரத்தில் நாம் என்ன கேட்டாலும் உடனடியாக கிடைக்கும்.
ஆனி திருமஞ்சன நாளில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை படிப்பது மிகவும் சிறப்பு. முழுவதும் படிக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் சிவபுராணத்தை மட்டுமாவது படிக்கலாம். சிவ புராணம் அல்லது திருவாசகம் எதை படித்தாலும் அதன் பொருள் உணர்ந்து படித்தால் அதன் முழு பலனும், சிவனின் அருளும் கிடைக்கும்.