சனிப் பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவானால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என பலரும் வழி தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடுபவர்கள் தங்களின் ஜாதகத்தில் சனி எந்த நிலையில் இருந்தாலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று இந்த ஒரு எளிய வழிபாட்டை செய்து விட்டு வந்தாலே சனி பகவான் அவர்களுக்கு நன்மையை மட்டுமே வாரி வழங்குவார். இது ஜோதிடம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஒரு தமிழ் வழிபாடாகும்.
சனி பகவான்: பயமா? வரமா?
சனி பகவான் என்றாலே கெடு பலன்கள் வழங்கக் கூடிய கிரகம், கஷ்டங்களை மட்டுமே தரக் கூடியவர் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் நன்மைகளை வழங்கக் கூடிய தெய்வமாக விளங்குகிறார். ஒரு மடங்கு கஷ்டத்தை கொடுத்தால் அதற்கு பல மடங்காக நன்மைகளை வாரி வழங்கக் கூடியவர் சனி பகவான். ஆனாலும் ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் இருக்கும் சனியின் வீடு, நிலைக்கு ஏற்ப சனியால் ஏற்படும் பலன்கள் மாறுபடுகிறது.
உங்களுடைய ஜாதகத்தில் ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டச் சனி, சனி திசை பாதிப்பு, சனி தசா புத்திகள், சனியின் நிலை பாதிக்கப்பட்டிருத்தல், நன்மையே வழங்க முடியாத அளவிற்கு சனியின் நிலை கெட்டுப் போய் இருந்தாலும் சரி, புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு சனி பகவான் கோவிலுக்கு சென்று எளிய பரிகாரம் ஒன்றை செய்து விட்டு வந்தாலே சனியால் ஏற்படும் பாதிப்புகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதுடன், சனியால் பல நல்ல பலன்கள் ஏற்படும். ஏழரைச் சனி உச்சத்தில் இருந்தாலும் கூட இந்த கோவிலுக்கு சென்று வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் ஒரு சிறப்பு பார்வை
சனியால் கடுமையான பாதிப்புகளை சந்திப்பவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலத்திற்கு சென்று வணங்கி வரலாம். இங்கு சிவன் அக்னீஸ்வரர் என்ற திருநாமத்துடனும், தாயார் மிருதுபாத நாயகி என்ற திருநாமத்துடனும் அருள் செய்கிறார்கள். இங்கு சிறிய விக்ரமாக, கையில் களப்பையுடன், பொங்கு சனியாக காட்சி தருகிறார் சனி பகவான். இந்த கோவிலில் சனி பகவான், தனது குருவான பைரவருக்கு எதிராகவும், மகாலட்சுமிக்கு அருகிலும் இருந்து காட்சி தருவது மற்றொரு தனிச்சிறப்பாகும். அதே போல் நவகிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்காமல் 'ப' வடிவத்தில் அமைந்திருப்பது மற்றொரு தனிச்சிறப்பாகும்.
இந்த தலத்தில் தான் சனி பகவான், சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டம் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. அதே போல் சனி பகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டு நள மகராஜா அனைத்தையும் இழந்ததன் காரணமாக திருநள்ளாறு தலம் ஏற்பட்டதை போல், மீண்டும் சனி பகவானின் அருளால் இழந்த அனைத்தையும் நளன் பெற்ற தலம் திருக்கொள்ளிக்காடு தலமாகும். இங்கு தற்போதும் அதர்வன வேத முறையிலேயே பூஜைகள் நடத்தப்படுகிறது. இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு சனி பகவான் மகிழ்ச்சியான நிலையுடன் நன்மைகளை வாரி வழங்கும் நிலையில் காட்சி தருவதாக ஐதீகம்.
சனி பாதிப்பு நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்
- சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளிலோ அல்லது சனிக்கிழமையிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமையிலோ கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
- கோவிலுக்கு செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன் உங்களின் வீட்டின் பூஜை அறையில் ஒரு லிட்டர் நல்லெண்ணெய், ஒன்றரை கிலோ உளுந்து, ஒன்றரை கிலோ கருப்பு எள் ஆகிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
- கோவிலுக்கு செல்லும் போது அந்த பொருட்களை எடுத்துச் சென்று, அங்குள்ளவர்களிடம் கொடுத்தால், அவர்கள் சுவாமி சன்னதியில் சேர்த்து விடுவார்கள்.
- பிறகு 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு, 9 முறை கோவிலை வலம் வர வேண்டும்.
- சிவனுக்கும் அம்பாளுக்கும் மாலை வாங்கிக் கொடுத்து, சனீஸ்வரர் சன்னதியில் கருப்பு வஸ்திரம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கிக் கொடுத்து உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
- சுவாமி தரிசனம் முடித்த பிறகு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆலயத்தில் இருந்து விட்டு வர வேண்டும்.
- வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ இங்கு சென்று வழிபட்டு வந்தால் சனியால் ஏற்படும் அனைத்து வித பாதிப்புகளும் படிப்படியாக குறைவதுடன், சனி பகவான் நன்மைகளை வழங்குவார்.