சஷ்டியில் முருகனை வேண்டி விரதம் இருந்தால் வேண்டுதல்கள் அனைத்தும் கைகூடும். இனி நடக்கவே நடக்காது என்ற காரியங்கள் கூட நடைபெறும். வெற்றி, மகிழ்ச்சி, நிம்மதி, வேலை என அனைத்தும் கிடைத்து வாழ்வில் நன்மைகள் பெருகும். முருகப்பெருமானின் அருளைப் பெற சஷ்டி விரதம் மிகச் சிறந்த வழியாகும்.
சஷ்டி விரதம் என்றால் என்ன?
திதிகளில் ஆறாவது திதியான சஷ்டி, ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டு, அவரின் அருளை பெறுவதற்கான நாளாகும். மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். ஜோதிட சாஸ்திரத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால், இந்த சிறப்புமிக்க நாளில் விரதமிருந்து மனதார முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து கஷ்டங்களும் விலகி நீங்கள் நினைத்தது நிறைவேறும்.
சஷ்டி விரதம் இருக்கும் முறை
- அதிகாலை வழிபாடு: சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜையறையில் முருகன் படத்திற்கு மலர்கள் சூட்டி தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால், பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.
- உண்ணா நோன்பு: காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் பூஜையறையில் அமர்ந்து 'கந்த சஷ்டி கவசத்தையோ' வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும்.
- பாராயணம்: காலையும், மாலையும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதும், ஸ்கந்த குரு கவசம் கேட்பதும் இல்லத்தில் நிம்மதியையும், சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் மனத்தெளிவையும் தந்தருளும்.
- ஆலய தரிசனம்: இந்த நாளில் அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். முருகக் கடவுளுக்கு அபிஷேகப் பொருட்கள் வழங்கி தரிசிப்பது இன்னும் விசேஷம். செவ்வரளி மலர்கள் சூட்டி மனதார வேண்டிக் கொண்டால், வேண்டியதையெல்லாம் தந்தருளுவான் வேலவன்.
- நைவேத்தியம்: எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கலாம். இவ்வாறு செய்வதால் எதிரிகளை துவம்சம் செய்வார் வெற்றிக்குமரன். தடைகளையெல்லாம் தகர்த்தெறிவார் கந்தகுமாரன்!
சஷ்டி விரதத்தின் மகிமை மற்றும் சிறப்புகள்
சஷ்டி விரதம் பலவிதமான சிறப்புகளைக் கொண்டது. குறிப்பாக ஜோதிடம் ரீதியாகவும் இது மிகுந்த பலன் தரும். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக் கூடியவரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.
- குழந்தைப்பேறு: 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது சஷ்டி விரத சிறப்பை கூறும் பழமொழியாகும்.
- நற்காரிய சித்தி: சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் மட்டுமல்ல, இந்த நற்காரியங்கள் நிறைவேறாது என்ற விஷயங்கள் கூட வாழ்க்கையில் நடக்க வைக்கும் அற்புதமான விரதமாகும்.
- 3 விரதங்கள்: முருகப்பெருமானுக்கு பொதுவாக மாதந்தோறும் 3 விரதங்கள் கடைபிடிக்கப்படும். இந்த மூன்று விரதங்களையும் முறையாக கடை பிடிப்பவர்களுக்கு அனைத்து நலன்களையும் குமரன் வழங்கிடுவார் என்பது ஐதீகம்.
சஷ்டி விரதம் இருப்பதால்...
- திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
- நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
- உடல் ஆரோக்கியம் மேம்படும், எதிரிகளின் தொல்லை நீங்கும்.
- குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபேறு கிடைக்கும்.
- காரிய சித்தி உண்டாகும்.