விநாயகப் பெருமானுக்கு உகந்த மிக உயர்வான விரதங்களில் சங்கடஹர சதுர்த்தி முக்கியமானது. குறிப்பாக, தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். ஏப்ரல் 2025 மாதத்திற்கான சங்கஷ்டி சதுர்த்தி, விகட சங்கடஹர சதுர்த்தி விரதமாக வருகிறது. தமிழ் புத்தாண்டின் முதல் சங்கடஹர சதுர்த்தி விரதம் இந்த ஆண்டு ஏப்ரல் 16 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் முக்கியத்துவங்கள்
- ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பட்சத்தின் நான்காவது நாளில் சங்கடஹர சதுர்த்தி வருகிறது.
- அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால், நல்ல அதிர்ஷ்டம், ஆரோக்கியம் மற்றும் செல்வம் பெருகும் என்பது ஜோதிட ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நம்பப்படுகிறது.
- தடைகள் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபட இந்த விரதம் பெரிதும் உதவும்.
- ஆசைகள் நிறைவேறவும், வாழ்வில் வெற்றி பெறவும் விநாயகப் பெருமான் அருள்வார்.
ஏப்ரல் 2025 சங்கடஹர சதுர்த்தி: தேதி மற்றும் நேரம்
ஏப்ரல் 16, 2025 அன்று விகட சங்கஷ்டி சதுர்த்தி வருகிறது. இந்த சதுர்த்தி திதியானது:
- துவங்கும் நேரம்: ஏப்ரல் 16ம் தேதி காலை 11:58 மணி
- முடியும் நேரம்: ஏப்ரல் 17ம் தேதி பகல் 01:24 மணி
சதுர்த்தி வழிபாடு பெரும்பாலும் மாலை நேரத்திலேயே செய்யப்பட வேண்டும் என்பதால், ஏப்ரல் 16ம் தேதியையே சங்கடஹர சதுர்த்தியாகக் கருதி பக்தர்கள் விரதமிருந்து வழிபடுகிறார்கள்.
சங்கடஹர சதுர்த்தி விரத முறைகள்
சங்கடஹர சதுர்த்தி அன்று பக்தர்கள் சூரிய உதயம் முதல் சந்திர உதயம் வரை விரதம் இருப்பார்கள். விரத முறைகள் அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப மாறுபடும்:
- சிலர் முழு உபவாசமாக விரதம் மேற்கொள்வார்கள்.
- சிலர் பழங்கள் மற்றும் பால் மட்டும் அருந்தி விரதம் இருப்பார்கள்.
வழிபாட்டு முறைகள்:
- பக்தர்கள் காலையில் விநாயகர் பூஜை செய்வார்கள்.
- விநாயகர் படத்தை அலங்கரித்து, பழங்கள், அருகம்புல், குங்குமம், மோதகம், தேங்காய் மற்றும் அட்சதை வைத்து வழிபடுவார்கள்.
- விநாயகர் மந்திரங்கள் மற்றும் ஸ்துதி சொல்லி வழிபடுவது மிகவும் நல்லது.
சங்கடஹர சதுர்த்தியில் சந்திரனுக்கு முக்கியத்துவம் உண்டு. பக்தர்கள் சந்திரோதயத்திற்காக காத்திருந்து, சந்திரன் உதித்த பிறகு சந்திரனுக்கு அர்க்யம் கொடுப்பார்கள். அதன் பிறகு விநாயகர் பூஜை செய்து விரதத்தை முடிப்பார்கள்.
முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட அன்றைய தினம் மாலை நேரத்தில் அருகம்புல் சாற்றி, விநாயகருக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி மனதார வழிபட்டாலும், அவர்களுக்கு விநாயகப் பெருமான் அருளை வழங்குவார் என்பது ஐதீகம்.
சங்கடஹர சதுர்த்தியின் தோற்றம்
இந்து நூல்கள் சங்கடஹர சதுர்த்தியின் தோற்றம் பற்றி ஒரு கதையை சொல்கின்றன. நாரத முனிவர் சூரியநாராயண ராஜனிடம் இந்த விரதத்தை பற்றி கூறினார். இந்த விரதத்தை கடைபிடித்தால் தடைகள் மற்றும் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்று அவர் அறிவுறுத்தினார். நாரத முனிவரின் அறிவுரையின் படி, ராஜன் இந்த விரதத்தை அனுஷ்டித்து, விநாயகரின் ஆசியால் தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றார். இந்தக் கதையின் மூலம், சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் கஷ்டங்கள் நீங்கும், ஆசைகள் நிறைவேறும் என்று பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.