புத அஷ்டமி என்பது அஷ்டமி திதியும், புதன்கிழமையும் சேர்ந்து வரும் ஒரு புனித நாள். இது வளர்பிறை அல்லது தேய்பிறை காலத்தில் வரலாம். அன்றைய தினம் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வணங்கி, அவர்களின் ஆசீர்வாதத்தை பெறலாம். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் மரணத்திற்குப் பின் துன்பம் வராது என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு ஜூலை 02, அன்று பகல் 3 மணிக்கு துவங்கி, ஜூலை 03ம் தேதி மாலை 04.32 வரை அஷ்டமி திதி உள்ளது.
புத அஷ்டமியின் முக்கியத்துவம் மற்றும் மகிமை
புத அஷ்டமி விரதத்தின் மகிமை பிரம்மாண்ட புராணத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த புனித விரதத்தை பக்தியுடன் கடைப்பிடித்தால், முந்தைய ஜென்மங்களில் செய்த பாவங்கள் உட்பட அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். சிவபெருமானையும், பார்வதி தேவியையும் உண்மையான நம்பிக்கையுடன் வழிபட்டால் ஆன்மீக ரீதியாகத் தூய்மை பெறலாம். இது ஜோதிட ரீதியாகவும் மிக முக்கியமானது. புதன் கிரகத்தின் தோஷத்தை குறைக்க இந்த விரதம் பெரிதும் உதவுகிறது. விரதம் மற்றும் பிரார்த்தனை மூலம், புதனின் கெட்ட தாக்கம் குறையும். இதனால் கலைகளில் தேர்ச்சி, உயர்ந்த ஞானம், நினைவாற்றல், கல்வியில் உயர்ந்த நிலை, உயர்ந்த பொறுப்புகள் ஆகியவற்றை பெற முடியும்.
புத அஷ்டமி அன்று வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் முறைகள்
புத அஷ்டமி அன்று சிவபெருமானையும், பார்வதி தேவியையும், விஷ்ணுவையும் வணங்க வேண்டும். கூடவே புதன் கிரகத்தையும் வணங்குவது மிகவும் அவசியம். புதன் பகவான், ஞானத்தையும், அமைதியையும் தருவார். கர்ம வினைகள் நீங்கவும் அருள் புரிவார். இந்த விரதத்தை இருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசம் இருப்பார்கள். கடவுளுக்குப் படைக்க புதன் பகவானுக்குரிய பச்சை பயிறு தானியத்தை நைவேத்தியமாகத் தயார் செய்வார்கள். பூஜை முடிந்த பிறகே அதைச் சாப்பிடுவார்கள்.
பூஜைக்கான பொருட்கள் மற்றும் சடங்குகள்:
- புதன் பகவானின் உருவம் பொறித்த தங்க அல்லது வெள்ளி நாணயத்தை வைத்து பூஜை செய்யலாம்.
- ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அதன் மேல் ஒரு தேங்காய் வைக்க வேண்டும். இது தூய்மையையும், தெய்வீகத்தையும் குறிக்கிறது.
- புதன் பகவானுக்கு மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
- பிறகு பிரசாதத்தை குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கொடுக்க வேண்டும்.
புத அஷ்டமி விரதத்தின் பலன்களும் தான தர்மங்களும்
இந்த விரதத்தை வருடத்தில் எட்டு முறை அனுஷ்டிக்க வேண்டும். கடைசி விரதத்தின்போது, புதன் பகவானின் உருவம் பொறித்த தங்க அல்லது வெள்ளி நாணயத்தை ஒரு பிராமணருக்கு தானமாக கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் எல்லா பாவங்களும் நீங்கும், சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்று ஆனி உத்திர திருநாள் என்பதால் இந்த நாளில் சிவ பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இன்று தானங்கள் செய்வது, சிவ வழிபாடு செய்வது, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது ஆகியன சிவ பெருமானின் அருளைப் பெற்றுத் தரும்.
ஜோதிட ரீதியான பரிகாரங்கள்:
ஜாதகத்தில் புதன் தோஷம் உள்ளவர்கள், புதன் கிழமையில் பூஜை செய்து வழிபட வேண்டும். புதன் பகவானுக்குரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுவதுடன், அவருக்குரிய பச்சை பயிறு தானியத்தை பசு மாட்டிற்கோ அல்லது ஏழைகளுக்கோ தானம் செய்யலாம். படிக்க முடியாத நிலையில் உள்ள ஏழை மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, பேனா போன்றவற்றை வாங்கிக் கொடுத்து உதவலாம். இவை அனைத்தும் புதன் பகவானின் ஆசீர்வாதங்களை பெற்றுத் தரும். தமிழ் மரபில் இத்தகைய விரதங்கள் ஆன்மீக முன்னேற்றத்திற்கும், ஜோதிட பலன்களை மேம்படுத்தவும் மிக முக்கியமானவை. மேலும், முருகன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு செய்வதும், ஆறுபடை வீடுகளில் தரிசனம் செய்வதும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.