நவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். அம்பிகையின் பல்வேறு வடிவங்களை வழிபடும் இந்நாட்களில், கொலு அமைப்பதன் சிறப்பு மற்றும் முதல் நாள் வழிபாட்டின் முக்கியத்துவத்தை இந்தப் பதிவில் காண்போம். நோய்களை நீக்கி, சகல சௌபாக்கியங்களையும் அருளும் இந்த தெய்வீக நாட்களின் சிறப்பை அறிந்துகொள்ளுங்கள்.
சண்டிகை வழிபாடு மற்றும் நவராத்திரி முக்கியத்துவம்
நாம் மனதார சண்டிகையை வழிபட்டால் நோய்களை தவிர்க்கலாம். சண்டிகை என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள், ஆயுதம் தரிப்பவள், மகா வீரியம் கொண்டவள், எப்பேர்பட்ட துக்கங்களையும் தூக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான காலமாகவே நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது. அதிலும் மகாளயபட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து நவராத்திரியை கொண்டாடினால் நோய்கள் வரும் முன் விரட்டலாம்.
மேலும் நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில் அம்பிகையை பூஜித்தால் அம்மை நோய் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும். மேலும் எதிர்மறையான விளைவுகள் எதுவும் அண்டாது. குறிப்பாக, ஜோதிட ரீதியாகவும் இந்த நாட்கள் சிறப்பு வாய்ந்தவை.
நவராத்திரியில் கொலு வைக்கும் நோக்கம்
ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதை மையப்படுத்தியே நவராத்திரியின் போது மட்டும் கொலு அமைக்கப்படுகிறது.
நவராத்திரி கொலு பொம்மை அடுக்கும் முறை:
- முதல் படியில்: ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.
- இரண்டாம் படியில்: இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.
- மூன்றாம் படியில்: மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.
- நான்காம் படியில்: நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.
- ஐந்தாம் படியில்: ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.
- ஆறாம் படியில்: ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.
- ஏழாம் படியில்: சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.
- எட்டாம் படியில்: தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.
- ஒன்பதாம் படியில்: பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.
நவராத்திரி முதல் நாள் வழிபாடு
அம்மன் வடிவம்: மகேஸ்வரி
பூஜையின் நோக்கம்: மது கைடவர் என்ற அசுரனை வதம் புரிதல்
மகேஸ்வரியின் வடிவம்: திரிசூலமும், பிறை சந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள் மகேஸ்வரி. சிவபெருமானுடைய பத்தினி மகேஸ்வரி. அளவிடமுடியாத பெரும் சரீரம் கொண்டவள். மகேஸ்வரியை மஹீதி என்றும் அழைப்பார்கள். மகேஸ்வரி சகல சௌபாக்கியத்தையும் அளிக்கக்கூடியவள்.
தென்நாட்டில் முதல் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம்: வனதுர்க்கை ஆகும். வனதுர்க்கை என்றால் வனத்தில் குடிகொண்டவள் என்பது பொருளல்ல. இந்த பிரபஞ்சத்தில் பிறந்த அனைத்து உயிர்களும் வாழ்க்கை என்னும் வனத்தில் அகப்பட்டு வெளிவர முடியாமல் தவிக்கின்றவர் ஆவார். எனவே, தேவியின் திருவுருவமான வனதுர்க்கையை நினைத்து வழிபடுவதால் வனத்தில் உள்ள அடர்ந்த இருளைப் போக்கி நம்மை செழுமைப்படுத்துகிறார்.
அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை: மல்லிகைப்பூ மாலை
அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை: வில்வம்
அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம்: சிவப்பு
அன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள்: சிவப்புநிற பூக்கள்
கோலம்: அரிசி மாவால் புள்ளி கோலம் போட வேண்டும்.
நைவேத்தியம்: வெண்பொங்கல்
குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது: 2 வயது
பாட வேண்டிய ராகம்: தோடி
பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி: மிருதங்கம்
குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம்: சுண்டல்
பலன்: வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும். மகிழ்ச்சியுடன் நீண்ட ஆயுள் வாழ்வார்கள்.