நம் தமிழ் மரபில், உடல்நலம் என்பது ஆன்மீகத்துடன் பின்னிப் பிணைந்தது. முருகப்பெருமானின் அருளாலும், நம் முன்னோர்களின் ஞானத்தாலும் வழிவழியாக வந்த ஆரோக்கிய குறிப்புகள் ஏராளம். அந்த வகையில், காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பசு நெய்யும் துளசி சாறும் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான பலன்கள் குறித்து இங்கு காண்போம். இது ஆயுர்வேதத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது.
ஆயுர்வேதமும் நம் மரபும்
காலை எழுந்ததும் நாம் முதலில் எடுத்துக் கொள்ளும் உணவு நம்முடைய உடலை சமநிலைப்படுத்தவும் உடலுக்கு ஆற்றலை வழங்குவதாகவும் இருக்க வேண்டும். அதனால் தான் காலை எழுந்ததும் முதல் நாள் உடலில் சேர்ந்து இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் படியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் அறிவுறுத்துகிறார்கள். உடல் சுத்தமாகும் போது நம் மனமும் ஆன்மாவும் சுத்தமாக இருக்கும் என்பது ஐதீகம். அந்த இரண்டையும் சுத்தி செய்யும் ஒரு ஆற்றல் மிக்க உணவாக இந்த பசு நெய்யும் துளசியும் இருக்கும் என்று ஆயுர்வேதம் நம்புகிறது.
நம் பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் ஆகியவற்றோடு நவீன மருத்துவமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அதற்கு அடுத்தபடியாக எடுத்துக் கொள்ளும் முதல் உணவு மிக முக்கியம். ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு காலை நேர முதல் டீடாக்ஸ் உணவு என்றால் அது இந்த பசு நெய் மற்றும் துளசி கலவை ஆகும்.
காலை வெறும் வயிற்றில் நெய்யும் துளசியும் சாப்பிடுவதன் முக்கிய பலன்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.
- குடல் ஆரோக்கியம் மேம்பட்டு செரிமான ஆற்றல் அதிகரிக்கும்.
- குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் முற்றிலுமாக வெளியேற்றப்படும்.
- நம் உடலில் இருக்கும் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
- துளசி சாறு மற்றும் நெய்யின் கலவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி வெளியேற்றும்.
- குறிப்பாக சுவாசக் கோளாறு மற்றும் சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக செயல்படும்.
நெய் சேர்ப்பதன் காரணம்
காலை வெறும் வயிற்றில் முதல் உணவாக நெய்யை சேர்த்துக் கொள்வதன் மிக முக்கிய காரணம், அது உடல், மனம் ஆகிய இரண்டின் வளர்ச்சியையும் சீராக்கும். சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தூய்மையான பசுவின் நெய் எடுத்துக் கொள்வது நம் உயிர் சக்தியின் மூலத்தை தூண்டக்கூடிய தன்மையை கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
- செரிமான ஆற்றலை மேம்படுத்தும்.
- மூளையின் செயல்பாட்டை தூண்டும்.
- சருமம் மற்றும் மூட்டுகளில் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும்.
- நெய் நம் மனதை அமைதிப்படுத்தி ஆற்றலை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது.
துளசி சாப்பிடுவதன் நன்மைகள்
அதிகாலை வேளையில் பெருமாள் கோவிலுக்கு பூஜைக்கு சென்றால் பூஜை முடிந்ததும் அவர்கள் கொடுக்கும் முதல் பிரசாதமே இந்த துளசி தான். இதில் ஆன்மீக தத்துவமும் இருக்கிறது ஆயுர்வேத மருத்துவமும் இருக்கிறது. ஆயுர்வேதத்தில் துளசியை எல்லா மூலிகைகளுக்கும் தாய் என்று குறிப்பிடுவார்கள். இது உடலில் இருக்கும் வாத, பித்த, கப தோஷங்களை சமநிலையில் வைத்திருக்க உதவி செய்யும்.
துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், ஆன்டி வைரல் பண்புகள், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றோடு ஆற்றல் வாய்ந்த ஆக்ஸிஜன் அற்ற பண்புகளும் நிறைந்திருக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி பருவ கால தொற்றுகள் வராமல் தடுக்க உதவி செய்யும்.
துளசி நெய் இரண்டையும் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்?
துளசி மற்றும் பசு நெய் ஆகிய இரண்டையும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பத்து துளசி இலையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்துவிட்டு கைகளால் கசக்கி ஐந்து முதல் ஆறு சொட்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு ஒரு ஸ்பூன் அளவு சுத்தமான பசுவின் நெய்யை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டையும் நன்கு மிக்ஸ் செய்து லேசாக அடுப்பில் வைத்து முப்பது வினாடிகள் மட்டும் சூடு செய்யவும். பின்பு லேசாக ஆறியதும் சாப்பிடும் அளவிற்கு வெதுவெதுப்பு நிலைக்கு வந்த பிறகு இந்த கலவையை அப்படியே எடுத்து சாப்பிட வேண்டியதுதான். இதை சாப்பிட்டு முடித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்க வேண்டும்.
இந்த சிறிய வீட்டு வைத்தியத்தை செய்வது அதற்கு நிறைய நேரம் பிடிக்காது. அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் செய்து முடித்து விட முடியும். ஆனால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இது எந்தவித மருந்து மற்றும் மருத்துவரின் சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் துல்லியம், செயல்திறன், பலன், ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பாகாது.