உடல் ஆரோக்கியம் என்பது வாழ்வில் வளம் சேர்க்கும் ஓர் அத்தியாவசிய அம்சம். தமிழ் சித்த மருத்துவத்தின் பாரம்பரிய அறிவுடன், டாக்டர் எஸ். காமராஜ் அவர்கள் பரிந்துரைக்கும் எளிய உணவு முறைகள், உடல் பலவீனத்தைப் போக்கி, ஆற்றலை அதிகரிக்க உதவும். உடல் எடை குறைவாக இருப்பவர்கள், வளரும் குழந்தைகள் என அனைவருக்கும் பயனளிக்கும், அற்புத மூன்று உணவுப் பொருள்களைக் கொண்டு உடல் வலுவை எப்படிப் பெறுவது என்பதை இங்கு விரிவாகக் காணலாம்.
உடல் பலவீனமாக இருப்பவர்கள், குறைந்த எடை கொண்டிருப்பவர்கள், உடல் ஆற்றல் இல்லாமல் இருப்பவர்கள், மற்றும் வளரும் குழந்தைகளுக்கு ஆற்றல் கிடைக்க என அனைவருக்கும் நன்மை பயக்கும் அற்புதமான 3 பொருள்கள் நம்மிடையே பயன்பாட்டில் உண்டு. கேழ்வரகு, நிலக்கடலை, பொட்டுக்கடலை இந்த மூன்றை மட்டும் வைத்து எப்படி உடலை பலமாக வைத்திருக்கலாம் என்பதற்கான குறிப்புகளை தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் சித்த மருத்துவர் எஸ். காமராஜ் அவர்கள் விளக்கியுள்ளார்.
உடல் வலு சேர்க்கும் பொருள்கள்
- கேழ்வரகு - 1 கிலோ
- பொட்டுக்கடலை - அரை கிலோ
- வேர்க்கடலை (நிலக்கடலை) - கால் கிலோ
செய்முறை
முதலில் கேழ்வரகை முளைகட்டி, நிழலில் உலர்த்தி ஈரம் இல்லாமல் வாணலியில் இலேசாக வறுத்து எடுக்கவும். பிறகு பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலையையும் இலேசாக வறுத்துக்கொள்ளவும். இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
எப்படி எடுத்துகொள்வது?
ஒரு டீஸ்பூன் முதல் 3 டீஸ்பூன் வரை உங்கள் தேவைக்கேற்ப மாவு எடுத்து தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும், இந்த கரைத்த மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும். பிறகு, பால் மற்றும் இனிப்பு தேவையெனில் பனங்கருப்பட்டி அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து குடிக்கலாம். விருப்பப்பட்டால் உப்பு சேர்த்தும் குடிக்கலாம். நாள் ஒன்றுக்கு ஒரு வேளை அல்லது இரண்டு வேளை வரை இந்த கஞ்சியை குடித்து வரலாம் என டாக்டர் எஸ். காமராஜ் கூறுகிறார்.
இந்த கஞ்சி குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
- உடலுக்கு வலு கொடுக்கும்.
- தசைகளை வலிமையாக வைக்கும் மற்றும் தசை வளர்ச்சிக்கு உதவும்.
- உடலுக்கு ஆற்றல் கொடுக்கும்.
- ஆரோக்கியமாக எடை அதிகரிக்கும்.
- எலும்புகளை வலுவாக வைக்கும்.
- சோர்வே இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் வளைய வர உதவும்.
சோர்வே இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்புடன் வளைய வர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த கஞ்சி மாவு அற்புதமான நன்மைகளை அளிக்கும்.
மூன்று பொருள்களின் ஆரோக்கிய நன்மைகள்
கேழ்வரகு நன்மைகள்
தானியங்களில் அதிகமாக கால்சியம் கொண்டவையாக கேழ்வரகு இருப்பதால், இது ஒரு சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதை முளைக்கட்டி எடுப்பது இன்னும் பல நன்மைகளை அளிக்கிறது. கேழ்வரகு முளைக்கட்டுவதால் அது கால்சியம் அளவை அதிகரிக்கிறது. முளைக்கட்டிய கேழ்வரகில் இரும்புச்சத்து 10 மடங்கு அதிகமாக மாறுகிறது. முளைக்கட்டிய கேழ்வரகு ஊட்டச்சத்து மிகுந்ததுடன், செரிமானத்தையும் எளிதாக்குகிறது.
பொட்டுக்கடலை நன்மைகள்
பொட்டுக்கடலை புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்டவை. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டது. இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பின் அளவை குறைக்கிறது. இது மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின்கள் பி மற்றும் இரும்புச்சத்து கொண்டுள்ளது. ஆரோக்கியமான எடை மேலாண்மைக்கும், செரிமான ஆரோக்கியத்திற்கும் இவை பெரிதும் உதவுகிறது. மேலும், இது எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நிலக்கடலை நன்மைகள்
நிலக்கடலை என்னும் வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இவை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. எடை இழப்புக்கு ஏற்றவற்றில் இவை முக்கியமானது. வேர்க்கடலை குறைந்த கிளைசெமிக் கொண்டவை. இது செரிமானம் பொறுமையாக நடைபெற உதவுகிறது. மேலும் இது இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி உடல் திறனை மேம்படுத்துகிறது. இதில் உள்ள மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் உடல் திசுக்களை பராமரித்து வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் உள்ள புரதம் தசை செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.