இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா 2025 ஆகஸ்ட் 27 அன்று வருகிறது. இந்த புனித நாளில் விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் புதன் பகவானின் அருளையும் பெறலாம். ஜோதிட ரீதியாகவும் சிறப்பான இந்த நாளில், முழுமையான பூஜை வழிமுறைகளையும், நல்ல நேரங்களையும் தமிழ் மரபுப்படி இங்கே காணலாம்.
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான ஏற்பாடுகள்
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் களைகட்டியுள்ளன. விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சிலையை ஆகஸ்ட் 26ம் தேதியான இன்று மாலையே வீட்டிற்கு வாங்கி வந்து வைக்கலாம்.
வீட்டில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பன்னீர், தீர்த்தம் அல்லது மஞ்சள் கலந்த நீரால் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு மனையில் அழகாக கோலமிட்டு, அதன் மீது ஒரு தாம்பூலம் அல்லது வாழை இலையில் பச்சரிசி பரப்பி அதன் மீது விநாயகர் சிலையை வைக்க வேண்டும்.
விநாயகர் சிலையை அருகம்புல், எருக்கம்பூ மாலை, நறுமணமிக்க பூக்கள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும். விநாயகர் சிலைக்கு குண்டுமணி வைத்து கண் திறந்து, அவரது வயிற்றுப் பகுதியில் காசு ஒன்றை வைக்க வேண்டும்.
வழிபடும் முறையும் நைவேத்தியங்களும்
விநாயகருக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள், சுண்டல், மோதகம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை உள்ளிட்ட விருப்பமான நைவேத்தியங்கள் படைத்து வழிபட வேண்டும்.
விநாயகருக்குரிய விநாயகர் அகவல் அல்லது எளிமையான விநாயகர் மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. எதுவும் தெரியவில்லை என்றால் "ஓம் கம் கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
விநாயகர் சதுர்த்தி 2025 வழிபாட்டிற்கான உகந்த நேரம்
- காலை: 07.45 மணி முதல் 08.45 மணி வரை
- காலை: 10.40 மணி முதல் பகல் 01.10 மணி வரை
- மாலை: 05.10 மணி முதல் இரவு 07.40 வரை
ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 03.52 மணியுடன் சதுர்த்தி திதி நிறைவடைந்தாலும், மாலை நேரத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளவர்கள் மாலை 5 மணிக்கு பிறகோ அல்லது 6 மணிக்கு பிறகோ வழிபாட்டினை செய்து கொள்ளலாம்.
விநாயகர் சிலை கரைக்கும் முறை
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்குப் பிறகு, விநாயகர் சிலை வாங்கிய நாளை கணக்கிட்டு, 3 அல்லது 5 வது நாளில் எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். ஓடும் தண்ணீரில் விநாயகர் சிலையை கரைப்பது மிகவும் விசேஷமானதாகும். இது விநாயகர் பெருமானின் அருளை முழுமையாகப் பெற உதவும்.