வாஸ்து சாஸ்திரம் வீட்டில் நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கு மிக முக்கியமான பங்காற்றுகிறது. குறிப்பாக, பிறந்த குழந்தைகள் அல்லது வளரும் குழந்தைகள் உள்ள அறையில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்குமாறு வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. இது உங்களின் குழந்தைகள் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும், நன்கு வளர உதவும். அதே சமயம், தவறுதலாக சில குறிப்பிட்ட பொருட்களை குழந்தைகள் அறையில் வைத்துவிட்டால், அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். ஜோதிடம் மற்றும் வாஸ்து ரீதியாக குழந்தைகள் அறையில் என்னென்ன பொருட்களை வைக்கக் கூடாது என்பதை இங்கே விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் அறையில் தவிர்க்க வேண்டிய முக்கிய வாஸ்து பொருட்கள்
1. முள் செடிகள்
வீட்டிற்குள் அழகுக்காக முள் செடிகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கற்றாழை, கூர்மையான முட்களைக் கொண்ட செடிகள் அல்லது கூர்மையான இலைகளைக் கொண்ட தாவரங்களைத் தவிர்ப்பது நல்லது. வாஸ்து படி, இந்தத் தாவரங்கள் கெட்ட ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டு வரலாம். இதனால் உங்களின் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படலாம்.
2. கண்ணாடி
கண்ணாடி பல வீடுகளில் முக்கியமான அலங்காரப் பொருளாக இருந்தாலும், வாஸ்து படி, இது உங்களின் குழந்தைகளின் அறையில் வைக்க ஏற்றதல்ல. கண்ணாடி ஆற்றலை பிரதிபலிக்கக் கூடியது என்பதால், குழந்தைகளுக்கு இது அமைதியற்ற சூழலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குழந்தைகளின் தூக்கம் பாதிக்கப்படுவது, அவர்களின் சுறுசுறுப்பு பாதிக்கப்படுவது ஆகியவை ஏற்படலாம்.
3. உடைந்த பொம்மைகள்
பொம்மைகள் உடைவது சாதாரணமானது தான். இருந்தாலும் உடைந்த அல்லது சேதமடைந்த பொம்மைகளை குழந்தைகள் இருக்கும் இடத்தில் வைப்பது சரியல்ல. வாஸ்து படி, இது ஒழுங்கற்ற, இணக்கமற்ற சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தும். அறையில் நல்ல அதிர்வலைகள் இருக்க வேண்டுமானால், அங்கிருந்து உடைந்த பொம்மைகளை அகற்றி விடுங்கள். இது குழந்தைகளின் ஆற்றல் ஓட்டத்தையும் பாதிக்கும்.
4. எதிர்மறை ஓவியங்கள்
குழந்தைகளின் அறைகளில் வைக்கும் படங்கள் அல்லது ஓவியங்களைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது அவர்களுக்கு பிடித்ததாக இருக்கலாம். ஆனால் வன்முறை அல்லது மோசமான செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தும் படங்களை குழந்தைகளின் அறைகளில் மாட்டாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தும் படங்களை அவர்களின் அறைகளில் மாட்டி வையுங்கள். அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கும் படங்களை மாட்டுவது நல்லது.
5. கனமான பொருட்கள் மற்றும் நெரிசல்
குழந்தைகள் அறையில் இருக்கும் நாற்காலி அல்லது மேஜையில் அதிக எடையுள்ள பொருட்களை அடைத்து இருப்பது போன்று வைக்கக் கூடாது. நெரிசல் இல்லாமல் வைத்தால் மட்டுமே நல்ல ஆற்றல்கள் வந்து செல்ல எளிதாக இருக்கும். கனமான பொருட்கள் அல்லது அதன் மீது அதிக எடை கொண்ட பொருட்களை குழந்தைகள் அறையில் வைப்பதால் அவர்களுக்கு அசௌகரியமான சூழலையே ஏற்படுத்தும். அதற்கு பதிலாக லேசான, குழந்தைகளை பாதிக்காத வகையிலான பொருட்களை வைக்கலாம்.