வைகாசி விசாகம் முருகப்பெருமான் அவதரித்த திருநாளாகும். இந்த புனிதமான நாளில் முருகனை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், வினைகள் தீர்ந்து வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். முருகனின் சிறப்புக்களையும், விரத வழிமுறைகளையும் இங்கு காணலாம்.
வைகாசி விசாகத்தின் முக்கியத்துவம்
முருகப் பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம் நாளில் முருகனை அனைவரும் விரதம் இருந்து வழிபடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் முருகனை மனதார நினைத்து, அவரது மந்திரங்களை சொல்லி வழிபட்டாலே முருகப் பெருமானின் அருளை பெற முடியும். ஜோதிட ரீதியாகவும் இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வைகாசி விசாகம் சிறப்புகள்:
வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்த ஒன்றாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து முருகன் ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
விசாகம் பெயர் காரணம்:
"வி" என்றால் "பட்சி" (மயில்), "சாகன்" என்றால் "சஞ்சரிப்பவன்" - மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்" என்றும் முருகனை வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில், குறிப்பாக ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். இந்த நாளில் விசாகனைப் போற்றி, விரதம் இருந்து வழிபட்டால் வினைகள் யாவும் தீரும் என்பது ஐதீகம். முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி.
வைகாசி விசாகம் விரதம் இருக்கும் முறை மற்றும் பலன்கள்
- குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி.
- திருமணமாகாதவர்கள் விரதமிருந்து முருகனை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
- இந்த விரதத்தை ஆண்களும் இருக்கலாம். அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர்.
- விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானித்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். தமிழ் கலாச்சாரத்தில் இந்த விரதம் மிகவும் முக்கியமானது.
முருகப்பெருமான் அவதார வரலாறு
குமார சம்பவம் பற்றி தெரியுமா?
வைகாசி விசாக நாளில் முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காளிதாசர் எழுதிய, "குமார சம்பவம்" எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. "சம்பவம்" என்றால் "தோன்றுதல்" என்று பொருள். குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார். முனிவர்களின் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய, ராமபிரானை விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார். அப்போது அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர் பத்மாசுரனை அழித்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார். இந்த நிகழ்ச்சியை வால்மீகி, "குமார சம்பவம்" என வர்ணித்துள்ளார். அந்த வர்ணனையே, காளிதாசருக்கு தலைப்பாக கிடைத்து விட்டது. இது தமிழ் ஆன்மீகத்தில் ஒரு முக்கிய நூலாகும்.
முருகன் அவதார வரலாறு:
பத்மாசுரன் என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம் அனுமதி வாங்கி விட்டான். இப்படி ஒருவன் பிறக்க முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தினான். சிவனிடம் முறையிடுவதற்காக சென்றனர் தேவர்கள். அப்போது, தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார் சிவன்; அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவத்தில் இருந்தார். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழிக்கும் ஒரு அம்சம் உருவாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். சிவன், உடனடியாக விநாயகரை அனுப்பி இருக்கலாம்; ஆனால், அவரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன் நெற்றிக் கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி, கங்கை நதியில் விட்டார். அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார். இதுவே முருகப்பெருமானின் அவதார வரலாறு.
முருகனின் சுப்பிரமணியன் பெயர் காரணம்:
முருகப்பெருமானுக்கு சுப்பிரமணியன் என்றும் ஒரு பெயர் உண்டு. "ஸுப்ரஹ்மண்யன்" என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது. ஜோதிட சாஸ்திரத்திலும் சுப்பிரமணியரின் அருள் மிகவும் போற்றப்படுகிறது.
முருகனின் முக்கிய லீலைகள்
- பிரம்மாவுக்கு, "ஓம்" என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது.
- தந்தைக்கே பாடம் சொன்னது.
- தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல் கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக் கடலையே கலங்கச் செய்தது.
- உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது (பழனி ஆறுபடை வீடுகளில் ஒன்று).
- தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றது.
- குறமகளான வள்ளியை மணந்து, இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.