மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் வாமன அவதாரம் தனிச்சிறப்பு மிக்கது. ராம, கிருஷ்ண அவதாரங்களைப் போல் பரவலாக அறியப்படாவிட்டாலும், ஐந்தாவது அவதாரமான இது பல உன்னதமான உண்மைகளை உணர்த்துகிறது. தசாவதாரத்தின் முதல் மனித அவதாரமான இதில் மகாவிஷ்ணு யாரையும் சம்ஹாரம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அற்புத அவதாரத்தின் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் அது நமக்கு உணர்த்தும் தத்துவங்களை ஜோதிடம்360 இல் விரிவாகக் காண்போம்.
மகாபலியின் ஆட்சி மற்றும் வாமனரின் வருகை
ப்ரஹலாதனின் பேரனான மகாபலி, குரு சுக்ராச்சாரியரின் வழிகாட்டுதலில் பல யாகங்கள் செய்து அபார சக்திகளைப் பெற்றான். அதன் விளைவாக தேவலோகத்தைக் கைப்பற்ற, தேவேந்திரன் அங்கிருந்து தப்பித்து ஒளிந்துகொள்ள நேர்ந்தது.
கஷ்யப ரிஷியின் மனைவி அதிதி, தன் மகன் தேவேந்திரனைப் பாதுகாக்க, கடுமையான விரதத்தில் ஈடுபட்டு, பகவான் விஷ்ணு தனக்கு மகனாகப் பிறக்கும் வரத்தைப் பெற்றாள். ஆவணி மாத துவாதசியில் ஷ்ரவண நட்சத்திரத்தில் அதிதிக்கும் கஷ்யப முனிவருக்கும் மகனாகப் பிறந்தார் மகா விஷ்ணு. மிகவும் குள்ளமாக இருந்ததால் வாமனர் என்று அழைக்கப்பட்டார்.
தேவலோகத்தை நிரந்தரமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும், மூன்று உலகங்களையும் ஆட்சி செய்யவும் ஆசைப்பட்ட மகாபலி, அஸ்வமேத யாகம் செய்து நர்மதா நதிக்கரையில் பிராமணர்களுக்கு தானம் வழங்கிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வாமனர், மூன்று அடி நிலத்தை தானமாக கேட்டார்.
சுக்ராச்சாரியரின் குறுக்கீடும் வாமனரின் விஸ்வரூப தரிசனமும்
வந்திருப்பவர் யார் என்பதை அறிந்த சுக்ராச்சாரியார், மகாபலியைத் தடுக்க முயற்சித்தார். ஆனால் அவன் அதைக் கேட்காததால், ஒரு வண்டாக உருவெடுத்து கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீரை வெளிவரவிடாமல் தடுத்தார். வாமனர் ஒரு தர்ப்பைப் புல்லால் அந்த வண்டை வெளியே தள்ளினார். இதனால் சுக்ராச்சாரியரின் ஒரு கண் குருடானது.
தான் கேட்ட தானத்தை தருவதற்கு மகாபலி சம்மதித்து, கமண்டலத்தில் உள்ள நீரை ஊற்றியதும், வாமனர் தன் உருவத்தை பெருக்க ஆரம்பித்தார். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அவரின் பாதங்களுக்கு ஆபரணங்களைப் போல் காட்சியளிக்கும் அளவுக்கு அவர் விஸ்வரூபம் எடுத்தார். தனது ஒரு காலால் பூலோகத்தையும், மற்றொரு காலால் மேல் லோகத்தையும் அளந்த பின், மூன்றாவது அடியை எங்கு வைக்கவேண்டும் என்று மகாபலியிடமே கேட்டார்.
கர்வ பங்கம் அடைந்த மகாபலி, மூன்றாவது அடியைத் தன் தலையில் வைக்குமாறு வேண்டினான். இதைக் கண்டு மகிழ்ந்த பகவான், மகாபலியை பாதாள உலகிற்கு அரசனாக்கி, அடுத்த தேவேந்திர பதவி மகாபலிக்குத்தான் என்று ஆசிர்வதித்தார். மேலும், மகாபலியின் அரண்மனை வாயிற்காப்பானாகத் தாமே இருக்கப்போவதாக அவர் வாக்களித்தார்.
ஓணம் பண்டிகையின் பின்னணி
வாமனர் பிறந்த நாளான ஆவணி மாத துவாதசியில் வரும் திருவோண நட்சத்திர நாளை ஓணம் பண்டிகையாக கொண்டாடுகிறோம். ஆண்டுதோறும் மகாபலி சக்கரவர்த்தி இந்த நாளன்று திருக்காக்கரையில் (கொச்சி அருகில் உள்ள கோவில்) உள்ள வாமனர் கோவிலில் அவரின் பிறப்பைக் கொண்டாட பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு வருவதாகச் சான்றோர்கள் கூறுகின்றனர். இது ஜோதிட ரீதியாகவும், புராண முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
சரி, வாமனர் எதற்காக மகாபலியிடம் குறிப்பிட்டு மூன்றடி நிலம் கேட்டார்? இந்த மூன்று அடி என்பது எதைக் குறிக்கிறது? வாங்க தெரிந்து கொள்வோம்.
வாமன அவதாரம் உணர்த்தும் உண்மைகள்
- ஒருவன் எந்தக் குலத்தில் பிறந்திருந்தாலும், உண்மையாக தர்ம காரியங்களில் ஈடுபட்டு, கொடுத்த வாக்கை காப்பாற்றினால் மிக உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை அசுரர் குலத்தில் பிறந்த மகாபலிக்குக் கிடைத்த அருள் நமக்கு உணர்த்துகிறது.
- ஒரு மனிதன் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்க முயற்சித்தால் என்னவாகும் என்பதை சுக்ராச்சாரியரின் கண் குருடான சம்பவம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
- மகாபலியைக் காக்கும் கடமையை பகவானே ஏற்றுக் கொண்டது, தன் மூலம் ஒருவன் தன்னிடம் சரணடைந்தால் அவனை பகவான் காப்பாற்றுவார் என்ற சரணாகதியின் முக்கியத்துவத்தை இந்த சரித்திரம் எடுத்துக்காட்டுகிறது.