Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

திருவாசகத்தில் சிவபுராணம்: வரலாறு, பலன்கள் மற்றும் முக்கியத்துவம்

சிவபுராணம் என்பது திருவாசகத்தில் இடம்பெற்ற மிக அற்புதமான பாடல். இதை படிப்பதற்கு முன் அதன் வரலாறு, தோற்றம், படிப்பதால் கிடைக்கும் பலன்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வது இன்னும் அதிகமான பலன்களை அள்ளித் தரும். தமிழ் ஆன்மீகத்தில் இது ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.

திருவாசகம் என்றால் என்ன?

"திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கு உருகார்" என்பார். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்தது மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம். இறைவன் சொல்ல மனிதன் கேட்டது பகவத் கீதை. அது போல் மனிதன் சொல்ல இறைவன் தன்னுடைய திருக்கரங்களால் எழுதி கையெழுத்திட்ட அற்புத நூல் திருவாசகம். திரு எனப்படும் தெய்வம் எழுதிய வாசகம் அல்லது திரு ஆகிய தெய்வத்தை பற்றிய வாசகம் என்பதால் இதற்கு திருவாசகம் என்னும் பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

மாணிக்கவாசகரின் திருவாசகம், தமிழ் ஆன்மீக இலக்கியத்தில் தனிச்சிறப்பு மிக்கது. இது ஆன்மா இறைவனுடன் இணையும் அனுபவத்தை விவரிக்கும் ஒரு பக்திப் பொக்கிஷம். ஜோதிட ரீதியாகவும், திருவாசகம் பாராயணம் செய்வது மன அமைதியையும், ஆன்மீக பலத்தையும் தரும் என நம்பப்படுகிறது.

சிவ புராணம் என்றால் என்ன?

சிவ பெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்துப் போற்றும் திருவாசகத்தின் முதல் பாடல் தான் சிவபுராணம். அதோடு உலக உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் கூறும் பாடல் இது. இறைவனை அடைய தடையாக இருக்கும் பாவங்கள் மட்டுமல்ல புண்ணியத்தில் இருந்தும் விடுபட்டு, இறைவனின் திருவடிகளை அடைய வழிகாட்டும் பாடல்.

மொத்தம் 95 அடிகளில் மிக எளிதாக அனைவருக்கும் பொருள் விளங்கக் கூடிய எளிய தமிழில் பாடப்பட்டுள்ளது. இந்த சிவபுராணத்தை அதன் பொருள் உணர்ந்து எவர் ஒருவர் படிக்கிறாரோ அவர் சிவனின் திருவடிகளை அடைவார் என இந்த பாடலில் மாணிக்கவாசகரே கூறி உள்ளார். அது உண்மை என சிவ பெருமானே தன்னுடைய கைப்பட எழுதி, கையெழுத்தும் இட்டுள்ளார் என்றால், அந்த வாக்கு பொய்யாகுமா என்ன? இந்த திருவாசகம் உருவானதே ஒரு அற்புதமான கதை தான்.

திருவாசகம் தோன்றிய வரலாறு

தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய 'திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார். மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.

சிவபெருமானே கையெழுத்திட்ட பாடல்கள்

எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார். மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகள் இருப்பதை கண்டு திகைத்து போயினர். ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில், "மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப்பட்டிருந்தது. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.

திருவாசகத்திற்கு பொருள் தெரியுமா?

ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் "ஆம் அடியேன் சொல்ல எழுதப்பட்டது தான்" என்று சொல்லி, வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார். தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர். மாணிக்கவாசகர் , புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப்பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார். அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார். ஆனி - மகம், மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.

சிவபுராணத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

  • நமச்சிவாய எனும் தொடக்கம்: நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குகிறது.
  • அமைப்புச் சிறப்பு: சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் 'வாழ்க' எனவும், அதை அடுத்த 5 வரிகள் 'வெல்க' எனவும், அடுத்த 8 வரிகள் 'போற்றி' எனவும் முடியும். இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிப்பதாக கூறப்படுகிறது.
  • முக்தி அடைந்த வயது: சிவபுராணத்தின் 32 வது வரியில் "மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்" என பாடி இருப்பார். இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிப்பதாக சிலர் கருதுகின்றனர்.
  • உருக்கமான வரி: திருவாசகத்தின் 18 வது வரியான "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.
  • ரமண மகிஷியின் அனுபவம்: ரமண மகிஷி, திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.
  • குழந்தை பாக்கியம்: காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர். பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார். அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன. இது திருவாசகத்தின் மகிமையை உணர்த்துகிறது.
  • இறந்த வீட்டில்: இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இது ஆன்ம சாந்திக்கு உதவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

சிவபுராணம் என்பது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகம் ஆகும். இது சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விவரித்து, உலக உயிர்கள் இறைவனை அடையும் வழிமுறைகளையும் கூறுகிறது.

மாணிக்கவாசகர் சொல்ல, சிவபெருமானே தனது திருக்கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதியதாக திருவாசகம் தோன்றிய வரலாறு கூறுகிறது. இது தமிழர்களின் ஆன்மீக நம்பிக்கையின் ஒரு முக்கிய அங்கமாகும்.

சிவபுராணம் மன அமைதியையும், ஆன்மீக பலத்தையும் தரும். பாவ புண்ணியங்களில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடைய வழிகாட்டும். குழந்தை பாக்கியம், முக்தி போன்ற சிறப்பு பலன்களையும் அருளும் என நம்பப்படுகிறது.

Our Other Services