நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், தமிழகத்தின் பழமையான சிவன் ஆலயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அருணாச்சலேஸ்வரர் அருள்பாலிக்கும் இத்தலத்தில், அண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவது சிறப்பு. இங்கு கிரிவலம் செல்லும் சரியான முறை, அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலை அம்மன் தரிசன முக்கியத்துவம், மற்றும் கோவில் பூஜை நேரங்கள் குறித்த முழுமையான வழிகாட்டியை இங்கே காணலாம்.
திருவண்ணாமலை கிரிவலத்தின் முக்கியத்துவம் மற்றும் சரியான வழிமுறை
திருவண்ணாமலை, சிவனடியார்களின் ஆன்மிக நகரமாக திகழ்கிறது. இங்கு சிவனே மலையாக வீற்றிருக்கும் அண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுவதற்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ஆண்டின் அனைத்து நாட்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். கிரிவலம் செய்வது தான் முக்கியம் என நினைத்து வரும் பக்தர்கள் பலர், மலையை மட்டும் சுற்றி வந்து விட்டு, கூட்டமாக உள்ளது, வரிசையில் காத்திருக்க முடியாது என அருணாச்சலேஸ்வரரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசிக்காமலேயே திரும்பி விடுகிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான முறையாகும்.
நீங்கள் கிரிவலம் செல்வதற்காக சென்றாலும், சாமி தரிசனம் மட்டும் செய்வதற்காக சென்றாலும் முதலில் கோவிலுக்குள் சென்று அக்னி லிங்கமாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும். அருணாச்சலேஸ்வரரையும், உண்ணாமுலை அம்மனையும் தரிசித்த பிறகு வெளியே வந்து விநாயகரை வணங்கி விட்டு, கிழக்கு கோபுர வாசலில் இருந்து தான் கிரிவலத்தை துவங்க வேண்டும். 14 கி.மீ., தூரம் கொண்ட கிரிவலத்தை மீண்டும் கிழக்கு கோபுர வாசலில் நிறைவு செய்து விட்டு, மீண்டும் கோவிலுக்குள் சென்று சிவனை தரிசித்து, நன்றி தெரிவித்து விட்டு, பிறகு தான் திரும்பி வர வேண்டும். இது தான் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் சரியான முறையாகும்.
வாழ்நாளில் ஒருமுறையாவது அவசியம் சென்று தரிசிக்க வேண்டிய அற்புதமான தலங்களில் ஒன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில். இதுவரை நீங்கள் சென்றது இல்லை என்றால் ஒருமுறை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டோ, முடிந்தால் ஒரே ஒரு முறையாவது கிரிவலம் சென்று விட்டோ வாருங்கள். உங்கள் ஆன்மிக பயணத்திற்கு இது மிகவும் முக்கியமானது.
அருணாச்சலேஸ்வரர் கோவில் பூஜை மற்றும் தரிசன விவரங்கள்
திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அருணாச்சலேஸ்வரருக்கு எந்த நேரத்தில் என்ன பூஜை என்ற விபரங்களை தெரிந்து கொண்டு கோவிலுக்கு செல்வதால் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க முடியும். அது மட்டுமல்ல முதியவர்களுக்கு தனி வரிசை தரிசனமும் சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இதையும் தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோவில் நடை திறக்கும் மற்றும் சாற்றும் நேரம்:
- நடை திறக்கும் நேரம்: காலை 05.30 மணி
- நடை சாற்றும் நேரம்: இரவு 08.30 மணி
தினசரி பூஜை நேரம்:
- உஷ காலம்: காலை 6 மணி
- காலசந்தி: காலை 8 மணி
- உச்சி காலம்: காலை 10 மணி
- சாயரட்சை: மாலை 6 மணி
- இரண்டாம் காலம்: இரவு 8 மணி
- அர்த்த ஜாமம்: இரவு 9 மணி
தரிசன நேரம்:
காலை 05.30 முதல் இரவு 08.30 வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.