சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்று பிரதோஷ விரதம். குறிப்பாக திங்கட்கிழமையில் வரும் சோம வார பிரதோஷ விரதம், சிவ வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாகும். ஜூன் 23, 2025 அன்று வரும் இந்த சிறப்பு பிரதோஷ தினத்தில், சிவபெருமானை வணங்குவதால் கிடைக்கும் ஆன்மிகப் பலன்கள், செல்வம் மற்றும் அமைதி குறித்து ஜோதிடம்360 இங்கே விளக்குகிறது.
ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும் பிரதோஷ விரதம், இந்த ஆண்டு ஜூன் 23, 2025 அன்று ஆஷாட கிருஷ்ண பக்ஷத்தில் திங்கட்கிழமை வருவதால், இது சோம வார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் ஆன்மிக வளர்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருகும். ஒவ்வொரு மாதமும் திரயோதசி திதியில் பிரதோஷ விரதம் வருகிறது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறந்தது. சனிக்கிழமையில் வரும் சனிப்பிரதோஷம் எப்படி கிடைப்பதற்கு அரிய பலன்களை தரக் கூடிய மிக முக்கியமான பிரதோஷமோ, அதே போல் திங்கட்கிழமையில் வரும் சோமவார பிரதோஷமும் மிகவும் முக்கியமானதாகும். சிவ பெருமானுக்கும், சந்திரனுக்கும் உரிய திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். அதிலும் இந்த ஆண்டு வரும் ஜூன் மாதத்தில் வரும் சோமவார பிரதோஷம் ஆனி மாத சிவராத்திரி மற்றும் முருகப் பெருமானுக்குரிய கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருகிறது. இது மிக மிக சிறப்பான ஒன்றாகும்.
பிரதோஷ விரதத்தின் முக்கியத்துவம்
புராணங்களின் படி, பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு உலக உயிர்களை காத்தார் சிவ பெருமான். தங்களுக்கு உதவிய சிவ பெருமானை தேவர்கள் உள்ளிட்டோர் போற்றி, வழிபட்டனர். இதனால் உள்ளம் மகிழ்ந்த சிவ பெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த தாண்டவம் ஆடி அனைவருக்கும் காட்சி கொடுத்து, வேண்டிய வரங்களை தந்து அருளிய வேளையே பிரதோஷ வேளையாக வழிபடப்படுகிறது.
பிரதோஷ கால வழிபாட்டு பலன்கள்
பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதால் நல்ல ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. சூரியன் மறைவதற்கு 72 நிமிடங்களுக்கு முன்பு பிரதோஷ காலம் தொடங்குகிறது. இந்த நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும். பிரதோஷ விரதத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால், ஆன்மீக மற்றும் பொருள் ஆசைகள் நிறைவேறும். முந்தைய பாவங்கள், துன்பங்கள் மற்றும் கவலைகள் நீங்கும்.
பிரதோஷ விரதத்தின் போது செய்ய வேண்டியவை
- பிரதோஷ விரதத்தின் போது பக்தர்கள் சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகம் செய்கிறார்கள்.
- சிவ லிங்கத்திற்கு பால், தயிர், தேன், நெய் போன்ற புனித திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.
- அப்போது "ஓம் நம சிவாய" மற்றும் "மஹா மிருத்யுஞ்சய" போன்ற மந்திரங்களை உச்சரிக்கிறார்கள்.
பிரதோஷ விரதம் எப்படி கடைபிடிக்க வேண்டும்?
- பிரதோஷ விரதம் இருக்கும் நாளில் காலையில் குளித்துவிட்டு, சிவனை மனதில் நினைத்து விரதத்தை தொடங்க வேண்டும்.
- அன்று முழுவதும் சிவ மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.
- மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
- பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டு, பிரசாதம் விநியோகிக்க வேண்டும்.
- அன்று இரவு உணவு உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.
பிரதோஷ விரதம் எந்த கிழமையில் வந்தால் என்ன பலன்?
| கிழமை | பெயர் | பலன் |
|---|---|---|
| திங்கட்கிழமை | சோம பிரதோஷம் | மன அமைதி கிடைக்கும். |
| செவ்வாய்க்கிழமை | பௌம பிரதோஷம் | நோய்கள் நீங்கும். |
| புதன்கிழமை | சௌமிய பிரதோஷம் | குழந்தைகள் நலமாக இருப்பார்கள். |
| வியாழக்கிழமை | குரு பிரதோஷம் | முன்னோர்களின் ஆசி கிடைக்கும். |
| வெள்ளிக்கிழமை | சுக்ர பிரதோஷம் | செல்வம் பெருகும். |
| சனிக்கிழமை | சனி பிரதோஷம் | பதவி உயர்வு கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். |