சங்கடஹர சதுர்த்தி விரதம் என்பது ஒவ்வொரு தமிழ் மாத தேய்பிறையில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி தினத்தில் விநாயகப் பெருமானை வழிபடும் ஒரு முக்கியமான விரதமாகும். இந்த விரதம் சங்கடங்களை நீக்கி, வாழ்வில் நற்பலன்களைத் தரக்கூடியது. விநாயகரின் அருள், ஜோதிட நன்மைகள், விரத முறைகள், மற்றும் பலன்களைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன?
ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி விரதத்தைத் தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர். சங்கடம் என்றால் துன்பம் என்றும், ஹர என்றால் ஒழிப்பது என்றும், சங்கடஹர என்றால் துன்பங்களிலிருந்து விடுதலை என்பதாகும். தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்த அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
விநாயகரும் ஜோதிட முக்கியத்துவமும்
ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர், கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக் கூடியவர் விநாயகர். மேலும், சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகளையும், தோஷங்களையும் போக்கக் கூடியவர். சந்திர பகவானும் தன் தோஷங்கள் நீங்கவும் தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயக பெருமானை நினைத்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமைகள்
- விநாயக விரதத்தை அங்காரகன் (செவ்வாய்) அனுஷ்டித்து நவகிரகங்களில் ஒன்றான பதவி பெற்றதால் சங்கடஹர சதுர்த்தி, அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
- அனுமன் சீதையைக் கண்டதும், தமயந்தி நளனை அடைந்ததும், அகலிகை கௌதமரை அடைந்ததும், பாண்டவர்கள் துரியோதனனை வென்றதும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையால் தான்.
- சதுர்த்தி தினத்தில் சந்திரனை வழிபடுவோருக்கு நன்மைகள் கிடைக்கவும் அருள் செய்ததன் அடிப்படையில் சதுர்த்தியன்று சந்திர தரிசனம் செய்யும் வழக்கம் உண்டாயிற்று.
சங்கடஹர சதுர்த்தி விரத முறை
சங்கடஹர சதுர்த்தியன்று காலையில் குளித்து முடித்து, விநாயகருக்கு பூஜை செய்து விரதம் இருந்து அவருக்கு பிடித்தவற்றை நைவேத்தியம் செய்து விநாயகர் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பானது ஆகும்.
"ஓம் தத் புருஷாய வித் மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோ தயாத்.." என்ற மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை சொல்லுவது சிறந்தது.
இந்த விரதத்தால் கிடைக்கும் பலன்கள்
- சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
- சகல நோய்களும் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- நினைத்த காரியம் கைகூடி, தடைகள் அகலும்.
- வீண் பழி அகலும், மன அமைதி உண்டாகும்.
- பகைவர்களும் நண்பர்களாவார்கள், உறவுகள் மேம்படும்.
- தீவினை அகன்று, மனச்சுமை நீங்கும்.