நிர்ஜலா ஏகாதசி என்பது இந்து மதத்தில் மிக முக்கியமான ஏகாதசியாக கருதப்படுகிறது. பத்ம புராணத்தின் படி, இந்த நாளில் விரதம் இருந்தால் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட முடியும். இந்த சிறப்புமிக்க ஏகாதசி விரதம் பற்றிய முழுமையான வழிகாட்டுதலை இங்கே காணலாம்.
நிர்ஜலா ஏகாதசி விரதத்தின் பலன்கள் மற்றும் முக்கியத்துவம்
நிர்ஜலா ஏகாதசி விரதத்தை எவர் ஒருவர் முறையாக விரத விதிகளை பின்பற்றி கடைபிடிக்கிறாரோ அவருக்கு கோடிக்கணக்கான தங்க நாணயங்களை தானமாக அளித்ததற்கு சமமான புண்ணிய பலன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், ஒரு வருடம் முழுவதும் வரும் 24 ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணிய பலனும் இந்த ஒரு ஏகாதசி விரதத்தால் கிடைப்பதாக ஜோதிடம் மற்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.
நிர்ஜலா ஏகாதசி அன்று புனித நீராடுவது, தானம் அளிப்பது, மந்திர ஜபம் செய்வது, ஹோமம் நடத்துவது, ஹோமத்தில் கலந்து கொள்வது ஆகிய அனைத்தும் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு அக்ஷய பாத்திரத்தை போன்ற அளவில்லாத பலனை தரும் என பகவான் கிருஷ்ணரே கூறி இருக்கிறார். இது பெருமாள் பூஜை செய்து புண்ணியம் சேர்க்க ஒரு அரிய வாய்ப்பு.
நிர்ஜலா ஏகாதசி விரத விதிகள்
பொதுவாக ஏகாதசி விரதம் என்பது முழு நேரமும் உபவாசமாக இருந்து, பெருமாளை நினைத்து வழிபட வேண்டும். துளசி தண்ணீர் மட்டும் சாப்பிட்டு ஏகாதசி திதியில் விரதம் கடைபிடித்து, மறுநாள் துவாதசி திதியின் கால் பாக காலம் நிறைவடைந்த பிறகு பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இது தான் ஏகாதசி விரதத்தின் முக்கியமான விதி.
ஆனால் நிர்ஜலா ஏகாதசி அன்று தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். மறு நாள் துவாதசியில் பாரணை செய்யும் நேரத்தின் போது தான் பூஜை செய்து, தண்ணீர் குடிக்க வேண்டும். அதற்கு பிறகு உணவு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதுவே மிகக் கடுமையான நிர்ஜலா ஏகாதசி விரத விதி ஆகும்.
கடுமையான விரதத்தை கடைபிடிக்க முடியாதவர்கள் செய்ய வேண்டியவை
அனைவராலும் இப்படி தண்ணீர் கூட குடிக்காமல் கடுமையான விரத விதிகளை பின்பற்றி இருக்க முடியுமா என்றால், இன்றைய கால கட்டத்தில் அது முடியாது. அடுத்த நாள் வரை சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள் என்ன செய்யலாம்? அவர்கள் நிர்ஜலா ஏகாதசி விரதம் இருந்த பலனை எப்படி பெறலாம் என்பது பற்றி சில வழிமுறைகள் சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது.
அதாவது, துவாதசி திதி வரை தண்ணீர், உணவு சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்கள், ஏகாதசி அன்று முழு நேரமும் தண்ணீர் குடிக்காமல் உபவாசமாக விரதம் மேற்கொள்ளலாம். மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூஜையை முடித்து விட்டு தண்ணீர், பால், பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் திடமான உணவுகள் எதையும் சாப்பிடக் கூடாது. மறுநாள் துவாதசியில் பாரணை நேரத்தில் பூஜை செய்து பெருமாளை வழிபட்ட பிறகு வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் சாப்பிடாமல் இருக்க முடியாது என்பவர்களும் நிர்ஜலா ஏகாதசி விரதம் இருந்த பலனை பெற முடியும்.