நவராத்திரி காலத்தில் தங்கம், வீடு, வாகனம் போன்ற சொத்துக்களை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி! குறிப்பிட்ட ஒரு நாளில் செய்யப்படும் முதலீடுகள் இருமடங்காகப் பெருகும் என்பது ஐதீகம். இந்த அற்புதமான மங்கலகரமான நாள் குறித்து ஜோதிடர்களின் கணிப்பு என்ன என்பதை இங்கே காணலாம்.
நவராத்திரியில் முதலீடுகளின் முக்கியத்துவம்
நவராத்திரியில் புதிய பொருட்கள், முதலீடுகள், புதிய தொழில்கள் துவங்குவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதிலும் திருமணம் தொடர்பான பொருட்கள், வீடு, வாகனம் வாங்குவது மிகவும் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி சூரிய கிரகண நேரத்தில் துவங்கி இருந்தாலும், மிகவும் மங்கலகரமான நேரத்தில் துவங்கி உள்ளது. நேரம், யோகம், தேதி என அனைத்தும் முக்கியத்துவமானதாகக் கருதப்படுகின்றன.
300 ஆண்டுகளுக்குப் பிறகு நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது யோகங்கள் கூடியதாக அமைந்துள்ளன. இதனால் இந்த ஒன்பது நாட்களுமே தங்கம், வீடு, வாகனம் உள்ளிட்டவை வாங்குவதற்கு ஏற்ற காலம் என ஜோதிடர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கம் மற்றும் சொத்துக்கள் வாங்க சிறந்த நாள்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பானது என்றாலும், அக்டோபர் 19 (வியாழக்கிழமை) மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாள் வீடு, வாகனம் என அனைத்து விதமான சொத்துக்களும் வாங்குவதற்கு மிகச் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. நவராத்திரியின் 5ம் நாளில் நவதுர்க்கைகளில் துர்கா தேவியின் ஸ்கந்தமாதா திருக்கோலத்தை வழிபடுகிறோம். பஞ்சமி திதியான இந்த நாளில் நீங்கள் வாங்கும் பொருட்கள் துர்கையின் அருளால் இருமடங்காகப் பெருகும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நவராத்திரியின் 5ம் நாளில் இந்த ஆண்டு கேட்டை நட்சத்திரமும், பூர்ண திதி எனப்படும் பஞ்சமி திதியும் சர்வார்த்த சித்தி யோகத்துடன் இணைந்து வருகின்றன. இந்த நாளில் வழிபடப்படும் ஸ்கந்தமாதாவிற்கு தூய்மை என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் அவருக்குரிய நாளில் சொத்துக்கள், தங்கம், வாகனம், வீடு வாங்குவது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டின் மிக மங்கலகரமான நாளாகவும் இந்த நாள் கருதப்படுகிறது. இந்த நாளில் தங்கம் வாங்குவது மிகவும் சிறந்தது.
முதலீட்டிற்கு ஏற்ற பண்டிகைக் காலம்
பண்டிகைக் காலம் என்பது முதலீடுகள் செய்வதற்கும், புதிய பொருட்கள் வாங்குவதற்கும் மிகவும் ஏற்ற காலமாக கருதப்படுகிறது. இந்த காலங்களில் அதிக அளவிலான முதலீடுகள் வருவதும், சொத்து விற்பனை அதிகரிப்பதையும் காண முடிகிறது. அதிலும் நவராத்திரி துர்கையின் அருளைப் பெறுவதுடன், முதலீட்டிற்கும் ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்த வரை தங்கம் முக்கியமான முதலீட்டுப் பொருளாகும். இது மிகவும் மதிப்புமிக்க உலோகம் ஆக உலகம் முழுவதும் கருதப்படுகிறது. இது சொத்தாக மட்டுமின்றி மங்கலப் பொருளாகவும் கருதப்படுவதால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களே அதிகம். முக்கியமான நாட்களில் தங்கம் வாங்கினால் அது சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். அதே போல் நவராத்திரியின் ஸ்கந்தமாதாவிற்குரிய வழிபாட்டு நாளில் தங்கம் வாங்குவதால் செல்வமும், மங்கலமும் பெருகிக் கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
நவராத்திரி சிறப்பு தினங்கள்
- பஞ்சமி திதி: ஸ்கந்தமாதா தேவியின் ஆளுகை நாள்.
- கேட்டை நட்சத்திரம்: செல்வம் பெருகும் யோகம்.
- சர்வார்த்த சித்தி யோகம்: எல்லா காரியங்களுக்கும் உகந்த நேரம்.
- அக்டோபர் 19: வீடு, வாகனம், தங்கம் வாங்க உகந்த நாள்.