இந்துக்களின் புனித யாத்திரைகளில் காசி யாத்திரை ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. கங்கையில் நீராடி, சிவபெருமானை தரிசிப்பது பாவங்களை நீக்கி மோட்சம் அளிக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் காசியில் இருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வரும்போது சில விஷயங்களில் கவனம் தேவை. இது குறித்த முழுமையான தகவல்களை இங்கு காணலாம்.
காசி யாத்திரை மற்றும் அதன் முக்கியத்துவம்
இந்துக்கள் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையாவது அவசியம் செல்ல வேண்டிய நகரங்களில் ஒன்று காசி. காசிக்கு சென்று கங்கையில் நீராடி விட்டு, ராமேஸ்வரம் வந்து தனுஷ்கோடியில் நீராடி ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசித்தால் மட்டுமே காசி யாத்திரை நிறைவு பெறும். காசிக்கு சென்று வந்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைப்பதால், அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் புண்ணியம் தேடி காசிக்கு செல்பவர்கள் புண்ணியம் சேருவதற்காக அங்கிருந்து வீட்டிற்கு எடுத்து வரும் மிக முக்கியமான பொருள், பாவமாக மாறி அவர்களுக்கு மோட்சம் கிடைப்பதை தடுத்து விடும். காசிக்கு செல்லும் பெரும்பாலானவர்கள் வீட்டிற்கு கொண்டு வரும் ஒரு பொருள் கங்கை தீர்த்தம்.
கங்கை தீர்த்தம்: புனிதமும் எச்சரிக்கையும்
கங்கை நதி நீர் புனிதமானது. கங்கா தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த நீர், இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானது. கங்கை நதி நீரை வைத்து அனைத்து மத சடங்குகளும் செய்வார்கள். வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, புண்ணியம் சேருவதற்காக கங்கை நீரை பயன்படுத்துவது உண்டு. கங்கை நதியை இந்துக்கள் கங்கா தேவி என்றும், கங்கை அம்மன் என்றும் அன்போடு அழைக்கிறார்கள். கங்கையில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனால், கங்கை தீர்த்தம் ஒவ்வொரு இந்து வீடுகளிலும் இருக்கும்.
ஆனால், காசியில் கங்கை நீரை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஹரித்வாரில் இருந்து தான் கங்கை தீர்த்தம் எடுத்து வருவார்கள்.
காசி: மோட்ச நகரம் மற்றும் மணிகர்ணிகா காட்
கங்கை நதி எங்கு இருந்தாலும் புனிதமானது. ஆனால், இந்த பழக்கத்திற்கு ஒரு காரணம் உள்ளது. காசி அல்லது வாரணாசி, மோட்ச நகரம் என்று அழைக்கப்படுகிறது. காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அதாவது பிறப்பு, இறப்பு சுழற்சியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
காசியில் இருக்கும் சுடுகாடு மணிகர்ணிகா மஹாஷ்மஷான் காட் என அழைக்கப்படுகிறது. இது காசியின் மிக புனிதமான இடமாக கருதப்படுகிறது. இங்கு சிவபெருமான் இறந்தவர்களின் காதில் தாரக மந்திரத்தை உபதேசித்து மோட்சம் அளிப்பதாக நம்பப்படுகிறது.
காசியில், சிவபெருமான் அகோர அவதாரத்தில் வணங்கப்படுகிறார். இது தான் வாரணாசியை மற்ற புனித தலங்களில் இருந்து வேறுபடுத்துகிறது. சாம்பலைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவதும் காசி நகரில் மட்டுமே நடைபெறும்.
கங்கை தீர்த்தத்தில் சாம்பல்: ஒரு ஆன்மீக எச்சரிக்கை
இறந்தவர்களின் சாம்பலை வாரணாசியில் கங்கையில் கரைக்கிறார்கள். அப்படி இறந்தவர்களின் சாம்பல் கரைக்கப்பட்ட நீரை காசியில் இருந்து கங்கை தீர்த்தமாக எடுத்து வரும்போது, சாம்பல் அதில் இருந்தால், ஆன்மா மோட்சம் அடைவதில் தடை ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
காசியில் இருந்து கங்கை நீரை எடுத்து வருவது, விடுதலை அடைந்த ஆன்மாக்களின் ஒரு பகுதியை எடுத்து வருவது போன்றது. இது நமக்கு புண்ணியத்திற்கு பதிலாக பாவத்தையே சேர்க்கும்.
இறந்தவர்கள் எந்த தடையும் இல்லாமல் விடுதலை பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். நாம் வீட்டிற்கு எடுத்து வரும் கங்கை நீரில் கலந்த சாம்பலில் இருக்கும் ஆன்மாவிற்கு மட்டுமின்றி இது நமக்கும் மோட்சம், புண்ணிய பலன்கள் கிடைப்பதை தடுக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் காசி சென்ற பலன் நமக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.