வாய்வுத் தொல்லை, வயிறு உப்பசம் ஆகிய இரண்டும் மிகவும் அசௌகரியமானவை. அடிவயிற்றுப் பகுதியில் கனமாக இருப்பது போன்ற உணர்வு, சோர்வு, அஜீரணக் கோளாறு போன்ற பல பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது இன்னும் மோசமாகலாம். உங்கள் வயிறு உப்பசமாகவோ அல்லது கனமாகவோ உணர்ந்தால், அது பெரும்பாலும் வாயுப் பிரச்சினைதான். ஜீரண மண்டலத்தில் அதிகப்படியான வாயு உற்பத்தியாகி வயிற்றில் தங்கும்போது இது உண்டாகிறது. இந்த ஆயுர்வேத முறைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஆரம்பத்திலேயே இதை சரிசெய்யலாம்.
ஆயுர்வேத தீர்வுகளின் சிறப்பம்சங்கள்
அஜீரணக் கோளாறு, வாய்வுத் தொல்லை, வயிறு உப்பசம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் ஆயுர்வேத மூலிகை பானங்கள் மற்றும் முறைகள் இங்கே:
- இஞ்சி டீ: வாயு உற்பத்தியைக் குறைத்து, வயிறு உப்பசத்தை நீக்கும். சர்க்கரை, பால் சேர்க்காமல் குடிக்கவும்.
- ஓமம் ஊறவைத்த குடிநீர்: அஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, வாயுத் தேக்கத்தைத் தடுக்கும். குறிப்பாக காலை உப்பசத்திற்கு சிறந்தது.
- திரிபலா சூரணம்: நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் கலந்த இந்த பொடி குடல் இயக்கத்தைச் சீராக்கி ஜீரணத்தை மேம்படுத்தும். இரவு வெந்நீரில் கலந்து பருகலாம்.
- புதினா இலைகள்: மனதை புத்துணர்ச்சியாக்குவதோடு, ஜீரண மண்டல தடைகளை நீக்கி, வயிறை இலகுவாக்கும். ஸ்மூத்தி, லெமன் ஜூஸ், டீயில் கலந்து பருகலாம்.
- வால் மிளகு: ஜீரண ஆற்றலை அதிகரித்து, குடலில் வாயு தேங்குவதைத் தடுக்கும். தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இந்த ஆயுர்வேத குறிப்புகள் வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்பசத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும். தொடர்ந்து பயன்படுத்தவும்.
விளக்கமான தகவல்கள்
இஞ்சியை தண்ணீரில் நன்கு தட்டி சேர்த்து கொதிக்க விட்டு அப்படியே குடிக்க வேண்டும். அதில் சர்க்கரை, பால் ஆகியவை சேர்க்கக் கூடாது. அதிக வாய்வு உற்பத்தியைத் தடுப்பதோடு வயிறு உப்பசத்தையும் குறைக்கும். வெறும் டீயாக மட்டுமல்ல, இஞ்சியை பல விதங்களில் நாம் எடுத்துக் கொள்ள முடியும். ஃப்ரஷ்ஷான இஞ்சியை தட்டி டீயாகக் குடிக்கலாம். இஞ்சி பவுடரை சேர்க்கலாம். இஞ்சியை சமையலில் ஏதேனும் வகையில் சேர்க்கலாம். இப்படி ஏதாவது ஒருவகையில் எடுத்துக் கொண்டு வரும்போது வயிற்றில் வாய்வுத் தேங்குவதைத் தடுக்க முடியும்.
சிலருக்கு காலையில் தூங்கி எழுந்ததும் வயிறு உப்பியது போல இருக்கும். அதற்கு மிகச்சிறந்த தீர்வாக இந்த ஓமம் ஊறவைத்த நீரை சொல்லலாம். வயிறு அசௌகரியமாக இருந்தால் அந்த காலத்தில் ஓம வாட்டர் என்று கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக் கொடுப்பார்கள். அஜீரணக் கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்து, வயிற்றில் வாய்வு தேங்காமல் தடுக்கும். ஏற்கனவே வயிறு உப்பசம் இருந்தால் அதை உடனடியாக சரிசெய்யும்.
நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் ஆகிய மூன்றையும் சேர்த்து கலந்து செய்த பொடி தான் இந்த திரிபலா. இதை ஆயுர்வேதம் காயகல்ப மூலிகைகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. இந்த திரிபலா குடல் இயக்கத்தைச் சீராக்கும். அதனால் ஜீரணம் சீராகும். வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு உப்பசம் ஆகிய பிரச்சினை இருப்பவர்கள் தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் வெந்நீரில் திரிபலா பொடியைக் கலந்து குடித்து வர இந்த பிரச்சினை சில காலங்களில் முழுமையாக சரியாகிவிடும்.
புதினா என்றாலே வாயைப் புத்துணர்ச்சியாக மாற்றும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும், மன அழுத்தத்துடன் இருக்கும்போது மனதை அமைதியாக்கி அழுத்தத்தைக் குறைக்கும். கொஞ்சம் புத்துணர்வாக மாற்றும் என்று நமக்கு தெரியும். ஆனால் இந்த புதினா இலைகளுக்கு வயிறு உப்பசம் மற்றும் வாய்வுத் தொல்லை ஆகியவற்றை சரிசெய்யும் தன்மையும் உண்டு. புதினாவில் சில பக்க விளைவும் உண்டு. அளவோடு எடுங்கள். இது ஜீரண மண்டலத்தில் ஏற்படும் தடைகளை நீக்கி வயிறை இலகுவாக வைத்திருக்கும். ஸ்மூத்தி, லெமன் ஜூஸ் ஆகியவற்றில் கலந்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது டீயாக செய்து குடிக்கலாம்.
சாதாரண கருப்பு மிளகு எவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டதோ அதேபோல வால் மிளகும் நிறைய மருத்துவப் பண்புகள் கொண்டிருக்கின்றன. கருப்பு மிளகு சளிக்கு நல்லது. வால்மிளகு வயிறு சார்ந்த பிரச்சினையை தீர்க்கும். வால்மிளகும் நன்கு காரத்தன்மையும் மெல்லிய கசப்புத் தன்மையும் கொண்டிருக்கும். இது ஜீரண ஆற்றலை அதிகரிக்கும். இந்த வால்மிளகு குடலில் வாய்வு தேங்குவதைத் தடுக்கும். வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு உப்பசம் உள்ளவர்கள் வால் மிளகைப் பொடி செய்து அதோடு தேன் கலந்து சாப்பிட்டு வர வயிறு உப்பசம் மற்றும் வாய்வுத் தொல்லை தீரும்.
முக்கிய குறிப்பு
வயிறு உப்பசம் மற்றும் வாய்வுத் தொல்லை அவ்வப்போது ஏற்படும்போது மேற்கண்ட மூலிகைகளைப் பயன்படுத்தி மிக எளிதாக ஆரம்பத்திலேயே பிரச்சினையை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். பிரச்சினை தீவிரமாகவோ அல்லது நீண்ட நாட்களாக இருந்தாலோ மருத்துவரை அணுகுங்கள். மேற்கண்ட மூலிகைகள் எந்தவிதத்திலும் நேரடி மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் உண்மைத்தன்மை, துல்லியம் மற்றும் உண்மைத் தன்மை ஆகியவற்றுக்கு சமயம் தமிழ் பொறுப்பேற்காது.