அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும், எப்படி வழிபட வேண்டும், விரதம் இருக்கும் முறை, அவற்றால் கிடைக்கும் பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். இந்த தமிழ் மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிக முக்கியமான இந்த அட்சய திருதியை நன்நாளில் மேற்கொள்ளப்படும் பூஜைகள் மற்றும் தான தர்மங்கள் நமது வாழ்வில் எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும்.
அட்சய திருதியை என்றால் என்ன?
பௌர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை ஆகும். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சய திருதியை என்று கொண்டாடுகிறோம். தேயாது, குறையாது, வளரும் என்ற பொருள் கொண்ட இத்திருநாளில் செய்யப்படும் செயல்களால் கிடைக்கும் நன்மைகள் தொடர்ந்து பெருகும் என்பது நம்பிக்கை. இதனால் தான் மக்கள் அன்று தங்கம் வாங்குவது ஒரு நம்பிக்கையாகும், ஆனால் விலை உயர்ந்த பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்பதில்லை.
அட்சய திருதியை மகிமை மற்றும் ஜோதிட முக்கியத்துவம்
மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமி ருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியை திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில், சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது பிறையான அட்சயத் திருதியை நாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அட்சய திருதியையில் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் தொடர்பான ஆவணங்கள், பணம் போன்றவற்றை எல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
கலசம் வைத்து வழிபடும் முறை
அட்சய திருதியை நன்னாளான இன்று பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன் மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிவைப் பரப்பி அதன் மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசம் செய்யுங்கள். அதனுள் காசுகளைப் போடுவது, காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள்.
அட்சய திருதியை பூஜை முறை
பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப் பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும். முதலில் விநாயகரை வேண்டிக் கொண்டு பின் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும் படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன் துதிகளைச் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது.
விரதத்தை நிறைவு செய்யும் முறை
பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்து விட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். உண்ணாவிரதம் இருப்பது, எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தைப் பொறுத்தது. கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்து விட்டதாக அர்த்தம். பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.
அட்சய திருதியை பூஜை பலன்கள் மற்றும் தானத்தின் மகிமை
அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றை விட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும் தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
தானத்தின் சிறப்பம்சங்கள்:
- - இன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும்.
- - ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது.
- - நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும்.
- - ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்.
- - பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும்.
- - மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்.
- - தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது.
- - தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும்.
- - முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும்.
அட்சய திருதியை அன்று என்ன வாங்கலாம்?
இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம். அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களையும் அட்சயதிரிதியை நாளில் வாங்கலாம்.
அட்சய திருதியை நாளின் சிறப்பு
ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்த நாளில் தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இது தான். லட்சுமி வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். தமிழ் மரபில் கொண்டாடப்படும் பல பண்டிகைகளைப் போலவே, இந்த அட்சய திருதியை திருநாளும் சிறப்பானது. இத்தகைய புனித நாட்களில் முருகப் பெருமான் அருளையும் வேண்டுவது நன்மை பயக்கும்.
அட்சய திருதியையில் வேறு என்னவெல்லாம் செய்யலாம்?
- மிருத்யுஞ்ஜய மந்திரம்: அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை. குழந்தைகளின் படுக்கை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும், பயங்கள் போகும்.
- புதிய முயற்சிகள்: அட்சயதிருதியை தினம் வணிகத்தினைத் துவங்குதல், பூமி பூஜை போடுதல், புதிய கலையினைக் கற்க ஆரம்பித்தல் போன்றவற்றுக்கும் உரியதாகக் கருதப்படுகிறது.
- ஆலிலை வழிபாடு: ஆலிலையை பூஜை அறையில் அல்லது வியாபார தலத்தில் வைத்திருந்தால் எதிரி பயம் விலகும். இந்த நாளில், குபேரபூஜை, லட்சுமி நாராயண பூஜை, சிவ பூஜை, மகாலட்சுமி பூஜை போன்றவற்றைச் செய்வது, நற்பலன்களைத் தரும்.
- தான தர்மம்: அட்சய திருதியை நாளில் இயன்ற அளவில் தானம் செய்வது மிக மிகச் சிறந்தது. இந்நாளில் செய்யப்படும் தானங்கள், பல மடங்கு அதிக நன்மை தரும்.
- பித்ரு கடன்கள்: பித்ருகளை வணங்கவும், அவர்களுக்கு உரிய நீத்தார் கடன்களை செய்யவும் உரிய நாள் இது. இதனால் கிட்டும் முன்னோரின் ஆசி மூவாயிரம் மடங்கு நற்பலனைத் தரும்.