நடராஜப் பெருமானுக்கு நடைபெறும் சிறப்பு வாய்ந்த மகா அபிஷேகங்களில் ஆனித் திருமஞ்சனம் மிகவும் முக்கியமானதாகும். இந்த வழிபாடு மகா புண்ணியத்தைத் தருவதுடன், பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி சிவனின் முழு அருளையும் பெற்றுத் தரும். தமிழ் ஆன்மீகத்தில் இந்த விழாவிற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.
ஆனித் திருமஞ்சனம் என்றால் என்ன?
ஆனித் திருமஞ்சனம் என்பது நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் மிகச் சிறப்பான உற்சவங்களில் ஒன்றாகும். வருடத்திற்கு ஆறு முறை நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். அவற்றில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் அன்று நடத்தப்படும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் நடத்தப்படும் ஆனி உத்திர திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியதாகும். இவை இரண்டும் அதிகாலையில், அதாவது பிரம்ம முகூர்த்த வேளையில் நடத்தப்படும் அபிஷேகங்கள் ஆகும். மற்ற நான்கும் மாலையில் நடத்தப்படுபவை. பொதுவாகவே பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யப்படும் எந்த ஒரு வழிபாடும் உடனடியாகவும், பல மடங்கு அதிகமான பலன்களையும் தரக் கூடியதாகும். அதனால் தான் அதிகாலையில் நடத்தப்படும் இதை மகா அபிஷேகம் என குறிப்பிடுகிறார்கள்.
ஆனி திருமஞ்சனத்தின் பலன்கள்
ஆனி திருமஞ்சனத்தை தரிசனம் செய்தாலோ, அந்த சமயத்தில் அபிஷேகம் செய்தாலோ, அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்தாலோ அளவில்லாத புண்ணிய பலன்கள் கிடைக்கும். நடராஜர் சன்னதி அமைந்துள்ள அனைத்து தலங்களிலும் ஆனி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும் என்றாலும், பொன்னம்பலம் ஆகிய தில்லை சிதம்பரம் நடராஜர் கோவிலில் இவ்விழா வெகு விமர்சையாக நடைபெறும். இது பத்து நாட்கள் உற்சவமாக நடத்தப்படும். இதில் தினமும் மாலையில் நடராஜப் பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வார்.
மகா அபிஷேகத்தின் சிறப்பு
வழக்கமாக சிவன் கோவில்களில் சுவாமிக்கு 10,11 பொருட்களைக் கொண்டு தான் அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் ஆனி உத்திர திருமஞ்சனம் அன்று நடராஜப் பெருமானுக்கு அதிகாலை 3 மணி துவங்கி கிட்டதட்ட 6 மணி நேரம் 21, 44, 51 என்ற எண்ணிக்கையிலான பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகப் பிரியரான சிவ பெருமானை குளிரச் செய்வதற்காக இந்த மகா அபிஷேகம் நடத்தப்படும். இந்த மகா அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னதியில் கூடி, வேண்டிய நலன்களை பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த சமயத்தில் நாமும் சிவ வழிபாடு செய்தால் நமக்கும் சிவ பெருமானின் அருளும், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜோதிட ரீதியாகவும் இந்த வழிபாடு மிகுந்த பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.
ஆனி திருமஞ்சனம் 2025 தேதி மற்றும் நேரம்
இந்த ஆண்டு ஆனி உத்திர திருமஞ்சனம் ஜூலை 02ம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜூலை 01ம் தேதி பகல் 12.44 மணிக்கு துவங்கி, ஜூலை 02ம் தேதி பகல் 02.21 மணி வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. வாய்ப்பு இருப்பவர்கள் அருகில் உள்ள சிவன் கோவில்களில் நடராஜருக்கு நடக்கும் மகா அபிஷேகத்தில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யலாம். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தும், சிவ வழிபாடு செய்தும் சிவ பெருமானின் அருளை பெறலாம். ஆனி திருமஞ்சன தரிசனம் என்பது அனைத்து வகையான நலன்களையும், வேண்டிய வரங்களை தரக் கூடியதாகும்.
வீட்டிலேயே நடராஜர் அருளை பெறுவது எப்படி?
கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே நடராஜப் பெருமானின் அருளை பெற வழிபாடு செய்யலாம். வீட்டில் நடராஜரின் உருவம் இருந்தால் அதற்கு முடிந்த பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். நடராஜரின் உருவம் இல்லாவிட்டால் சிவனின் விக்ரஹம் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்யலாம். விக்ரஹம் இல்லை சிவன் அல்லது நடராஜரின் படம் தான் உள்ளது என்றால் அவற்றிற்கு சந்தனம், பூக்களால் அலங்கரித்து, பால் மற்றும் ஏதாவது இனி நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். சிவ புராணம், நடராஜர் பத்து, திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி நடராஜரின் அருளை பெறலாம். பகல் 02.21 வரை மட்டுமே உத்திரம் நட்சத்திரம் இருப்பதால் காலையிலேயே நடராஜர் வழிபாடு செய்வது சிறப்பு.
ஆனி திருமஞ்சன தரிசன பலன்கள்
ஆனி திருமஞ்சனம் அன்று என்ன வேண்டுதல் உள்ளதோ அது நிறைவேற வேண்டும் என நடராஜப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொள்ளலாம். நம்முடைய வேண்டுதலை நடராஜர் முன் சொல்லி, மனமுருகி சிவ புராணம் அல்லது முடிந்தவர்கள் திருவாசகம் முழுவதையும் படித்தால் நிச்சயம் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும், சிவனின் அருளை பெற வேண்டும், முக்தி வேண்டும் என எப்படிப்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் சிவனை மனதார வழிபட்டு முறையிட்டால், அந்த வேண்டுதல் உடனடியாக நிறைவேற சிவ பெருமான் அருள்புரிவார். தமிழ் ஆன்மீகத்தில் இந்த பூஜை மிகவும் போற்றப்படுகிறது.